கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றில் இரண்டாவது போட்டியில் இந்தியா நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறுகிறது.
கடந்த டி20 உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் அரையிறுதி போட்டியில் மோதிய நிலையில் அதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்தை பழி தீர்க்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

இந்த போட்டியில் இந்தியாவின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கப் போகிறது என்று தற்போது பார்க்கலாம். பொதுவாக எந்த ஒரு அணியும் நாக் அவுட் சுற்று போட்டிகளில் பிளேயிங் லெவனை மாற்றாது. ஏற்கனவே எந்த வீரர்களை தக்கவைத்து விளையாடினார்களோ அதே ஒரு அணியை தான் பொதுவாக அனைத்து கேப்டன்களும் தேர்வு செய்வார்கள்.
ஆனால் சில கேப்டன்கள் களத்திற்கு என்ன தேவையோ அணிக்கு எது சிறந்ததோ அதை தேர்வு செய்வார்கள். உதாரணத்துக்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் தோனி அஸ்வினை நீக்கிவிட்டு ஸ்ரீசாந்தை சேர்த்தார். தற்போது இந்திய அணியில் ஒரே ஒரு குறை இருக்கிறது என்றால் அது நடு வரிசையில் சிவம் துபே பொறுமையாக விளையாடுவது தான்.
சிஎஸ்கே அணிக்காக அதிரடி காட்டி ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்திய சிவம் துபே, இந்திய அணிக்காக விளையாடும்போது தடுமாறுகிறார். சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 204 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் சிவம் துபே நடுவரிசையில் தடுமாறியதால் இந்திய அணி 205 ரன்கள் தான் எடுத்தது.
இதனால் சிவம் துபேவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சன் போன்ற அதிரடி வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதே போன்று ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தடுமாறி வருவதால் அவருக்கு பதிலாக சாகலை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
எனினும் இந்த மாற்றத்தை ரோகித் சர்மா செய்வாரா இல்லை முக்கிய போட்டிகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற விதியை ரோகித் கையில் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம் இருக்காது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.