நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டி துவங்கும் முன்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி அந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். விராட் கோலிக்கு முழங்காலில் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக அவர் கூறினார். இதை அடுத்து விராட் கோலி இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா? அதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் அதில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்து அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் முதல் போட்டியின் முடிவில் விளக்கம் அளித்தார். முதல் ஒருநாள் போட்டிக்கு முந்தைய தினம் வரை விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது அவரது காலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்ததாகவும் கூறினார்.
ஆனால், போட்டி நாள் அன்று காலையில் எழுந்து பார்த்த போது விராட் கோலியின் முழங்காலில் வீக்கம் இருந்ததாக குறிப்பிட்டார். அந்த வீக்கத்தின் காரணமாக விராட் கோலியை முதல் ஒருநாள் போட்டியில் ஆட வைக்கவில்லை என்றார் கில். விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஆடுவாரா? என்று கேள்வி சுப்மன் கில்லிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த துணை கேப்டன் சுப்மன் கில், "விராட் கோலிக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை அவர் நிச்சயமாக இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என நினைக்கிறேன்." என்றார். இதன் மூலம் விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் முழங்கால் வலி தீவிரமானது அல்ல என்ற விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் நகரில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 9, ஞாயிறு அன்று அந்தப் போட்டி நடைபெற உள்ளது.