பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும், இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸும் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இந்திய அணி வெற்றி பெற்றதே கிடையாது. இதனால் பெரும் நெருக்கடியுடன் இந்தியா களமிறங்கியது.

டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க ஜெய்ஸ்வால் மற்றும் கருண் நாயர் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். இந்த சூழலில் ஜெய்ஸ்வால் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் கடுப்பாகி ஜெய்ஸ்வாலை வம்பு இழுக்கும் வகையில் ஏதோ பேசினார். இதனை காதில் வாங்கிய ஜெய்ஸ்வால் அமைதியாக இல்லாமல் ஸ்டோக்சை பார்த்து நான் ஏதேனும் சொல்லி விடுவேன். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டாம் என்று கூறினார். இதனை அடுத்து ஸ்டோக்ஸ் அப்படி என்ன சொல்ல போகிறாய் என்பது போல் பதில் கொடுத்தார்.
இதனை அடுத்து அடுத்த பந்தை கருண் நாயர் எதிர்கொண்டு முடித்தபின் மீண்டும் ஸ்டோக்ஸ் ஜெயிஸ்வாலிடம் சென்று என்னை பார்த்து என்ன சொன்னாய் என்று கேட்டார். இதை அடுத்து நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் ஸ்டோக்ஸ் ஜெயிஸ்வாலை வம்பு இழுக்கும் வகையில் பேசினார்.
ஆனால் ஜெய்ஸ்வால் அதனை காதில் வாங்காமல் சென்று விட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜெயிஸ்வால் இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் 50 ரன்கள் அடித்திருந்தார். ஜெயஸ்வால் விக்கெட் மிகவும் முக்கியமானது என்பதால் அவருடைய கவனத்தை சிதறடிக்கும் விதமாக ஸ்டோக்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கது. எனினும் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டோக்ஸ் பந்துவீச்சு கவனக்குறைவு காரணமாக ஆட்டம் இழந்தார். ஜெய்ஸ்வால் விக்கெட் வீழ்த்திய பிறகு ஸ்டோக்ஸ் அதனை கத்தி கொண்டாடினார்.