மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் விளையாடிய போது அவருடைய பேட் உடைந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் ஆடுகளம் தற்போது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது.

இதனால் இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் பொறுமை காத்து விளையாடினார்கள். ஆனால் பந்து எதிர்பார்த்தது போல் பெரிய அளவு அபாயகரமாக இல்லை. இன்னும் இங்கிலாந்து வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வொக்ஸ் வெறிகொண்டு வீசினார்.
அப்போது அவர் வீசிய பந்து ஒன்றை ஜெய்ஸ்வால் தனது பேட்டால் தடுக்க முற்பட்டார். அப்போது பேட்டின் ஹேண்டில் உடைந்து தனியாக கைக்கு வந்தது. இதனால் ஜெய்ஸ்வால் அதிர்ச்சி அடைந்தார். ஏண்டா! இவ்வளவு வேகமாக வெறிகொண்டா பந்து வீசுவீர்கள் என்பது போல் ஜெயிஸ்வால் கிறிஸ் வொக்ஸை பார்த்து முறைத்தார். இதை அடுத்து பேட் உடனடியாக மாற்றப்பட்டது. உடைந்த பேட்டை நடுவர்கள் சோதனை செய்தனர்.
இவ்வளவு வேகமாக பந்து வீசி பேட்டே உடையும் அளவிற்கு இருப்பதால், வீரர்கள் சரியான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் எச்சரிக்கை கொடுத்திருந்தனர்.கிரிக்கெட் சாதாரண விளையாட்டு கிடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இதனிடையே, இந்திய அணி நான்காவது டெஸ்டில் முதல் நாள் மதிய நேர இடைவேளை என்பது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது