பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கின்றார். ஜெய்ஸ்வால் கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார்.
அதன் பிறகு ஜெய்ஸ்வால் இதுவரை 20 டெஸ்ட் போட்டியில் விளையாடி 5 சதம், 10 அரை சதம் என அவருடைய சராசரி 52 என்ற அளவில் இருக்கின்றது. தற்போது ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் சேர்த்தார்.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 28 ரன்கள் சேர்த்தார். இந்த சூழலில் ஜோஸ் டேங்க் வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆனார். எனினும் ஜெய்ஸ்வால் மகத்தான சாதனையை படைத்திருக்கின்றார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை சேர்த்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
ஜெய்ஸ்வால் 40 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்திருந்தார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், சேவாக் ஆகியோரும் தலா 40 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்தனர். இந்த ரெக்கார்டை ஜெய்ஸ்வால் உடைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களில் இதை தவறவிட்டார்.
எனினும் இரண்டாவது இன்னிங்சில் இந்த ரெக்கார்டு சமன் செய்திருக்கின்றார். கிரிக்கெட் ஜாம்பவான் விஜய் ஹசாரே 43 இன்னிங்ஸ்களிலும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் 43 இன்னிங்ஸ்களிலும் 2000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டி இருந்தனர். தற்போது ஜெய்ஷ்வால் இந்த பட்டியலில் முதலிடத்தை டிராவிட், சேவாக்குடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்.