ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடந்து வரும் நிலையில், இந்திய அணி வெற்றிபெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியின் 3வது நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 4வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி 84 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது ஜோ ரூட் வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சனின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்கள் சேர்த்த நிலையில், 2வது இன்னிங்ஸில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 655 ரன்களை விளாசி உள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியும் 655 ரன்களை விளாசி இருக்கிறார்.
இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமிருக்கும் சூழலில், விராட் கோலியின் சாதனையை அடுத்த போட்டியில் ஜெய்ஸ்வால் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த பட்டியலில் 2002ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இங்கிலாந்து மண்ணில் 606 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும், 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் 593 ரன்கள் சேர்த்து 3வது இடத்திலும், 1962ஆம் ஆண்டு இந்திய மண்ணில் விஜய் மஞ்ச்ரேக்கர் 586 ரன்கள் எடுத்து 4வது இடத்திலும் உள்ளனர். சிறுவயதிலேயே ஜாம்பவான் வீரர்களின் பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.