ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் இந்திய அணியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகம் செய்யப்படடர். அறிமுக போட்டியில் சதம் விளாசி அசத்திய ஜெய்ஸ்வால், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ஏமாற்றம் அளித்தார். இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார். முதல் போட்டியில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால், 2வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

2 போட்டிகளிலும் சேர்த்து 321 ரன்களை குவித்திருந்த யஷஸ்வி ஜெஸ்வால், இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறினார். இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலை வீழ்த்த இங்கிலாந்து அணி பிரத்யேக திட்டத்துடன் களமிறங்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் ரோகித் சர்மா, ஜடேஜாவின் அபார சதம் காரணமாக இந்திய அணி 445 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை ஜெய்ஸ்வால் எடுத்து கொண்டார்.
ஒரு பக்கம் சுப்மன் கில்லை நிறுத்தி வைத்து, 25 ஓவர்களை வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் பந்து போதுமான அளவிற்கு பழையதாக மாறிய பின், ஆண்டர்சனை அட்டாக் செய்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து சிக்ஸ், ஃபோர்ஸ் என்று மிரட்டிய ஜெய்ஸ்வால், 49 ரன்களில் இருந்த போது சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இதனை பார்த்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் இருவரும் உற்சாகத்தில் சிரித்து கொண்டிருந்தனர்.
பின்னர் டாம் ஹார்ட்லி, ரெஹான் அஹ்மத், ஜோ ரூட் என்று இங்கிலாந்து அணியின் 3 ஸ்பின்னர்களையும் அட்டாக் செய்தார் ஜெய்ஸ்வால். இவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஃபைன் லெக், டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக், டீப் ஸ்கொயர் லெக், ஸ்கொயர் லெக், மிட் விக்கெட், மிட் ஆன், டீப் பேக்வர்ட் பாய்ண்ட் மற்றும் டீப் கவர் என்று அட்டாக்கில் ஃபீல்ட் செட்டப்பை அமைத்தார்.
ஆனால் எந்த ஃபீல்ட் செட்டப்பும் ஜெய்ஸ்வாலின் அதிரடியை கட்டுப்படுத்தவில்லை. கண்மூடி திறப்பதற்குள் 90 ரன்களை எட்டிய ஜெய்ஸ்வால், அதன்பின் மார்க் வுட் பவுலிங்கில் பவுண்டரி அடித்து ச்122 பந்துகளில் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். இதன் மூலம் 13 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.