லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தது.
இதனை அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் அபாரமாக விளையாடி இரண்டாவது நாள் முடிவில் அரைசதம் அடிக்க, ராகுல் சாய் சுதர்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து, மூன்றாவது நாளில் இந்திய அணி 75 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்கள் உடன் ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஆகாஷ் தீப் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் சேர்க்க மறுமுனையில் பொறுமை காத்த ஜெய்ஷ்வால் இந்தியாவின் இன்னிங்ஸை கட்டமைத்தார்.
ஆகாஷ் தீப் 66 ரன்களில் ஆட்டம் இழக்க, கில் 11 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் அடித்திருக்கும் ஆறாவது சதம் இதுவாகும்.
அது மட்டுமில்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக நான்காவது சதமும், இந்திய மண்ணுக்கு வெளியே நான்காவது சதமும் ஜெய்ஸ்வால் அடித்து இருக்கின்றார். நடப்பு தொடரில் முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் சதம் அடித்த நிலையில் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் தடுமாறியதாக விமர்சனம் எழுந்தது.
தற்போது இந்திய அணி நெருக்கடியான கட்டத்தில் இருந்தபோது, ஜெய்ஸ்வால் மீண்டும் சதம் அடித்து அணியை காப்பாற்றி இருக்கிறார். இதேபோன்று இந்தியாவிற்கு வெளியே அதிக சதம் அடித்த தொடக்க வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஷேவாக் 59 இன்னிங்ஸில் நான்கு சதம் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் 27 இன்னிங்ஸில் நான்கு சதம் அடித்து இருக்கின்றார்.
இரண்டாவது இடத்தில் ஏழு சதத்துடன் ராகுலும், முதலிடத்தில் 15 சதத்துடன் கவாஸ்கரும் உள்ளனர். இதைப் போன்று 23 வயதில் வெளிநாடுகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கரின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்திருக்கின்றார். இருவரும் தலா நான்கு சதம் அடித்துள்ளனர். இந்த வயதில் சச்சின் ஏழு சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று 23 வயதில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் பட்டியலில் ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். முதல் இடத்தில் சச்சின் உள்ளார்.