மான்செஸ்டர்: இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அபாரமான திறமை கொண்ட வீரராகப் பார்க்கப்படும் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாகவே விளையாடி வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 36.37 என்ற சராசரியில் 291 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், சில சமயங்களில் அவர் சொதப்பவும் தவறவில்லை. குறிப்பாக, ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்தது, அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து பேசிய ஹர்ஷா போக்ளே, "டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்கள் ஒரு வீரருக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். எதிரணிகள் தற்போது அவரது பலவீனத்தைக் கண்டறியத் தொடங்கிவிட்டார்கள். அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியை ஜெய்ஸ்வால் தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இடது கை ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 2000 ரன்களைக் கடந்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற கடினமான வெளிநாட்டு மைதானங்களில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்காவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
நான்காவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி போட்டியை டிரா செய்ய வேண்டி நிதான ஆட்டம் ஆடியது. ராகுல் 90 ரன்கள், சுப்மன் கில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்து போட்டியை டிரா முடிவை நோக்கி கொண்டு சென்றனர்.