மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சூப்பர் ஸ்டார் ஆக 24 வயது வீரரான அபிஷேக் ஷர்மா உருவெடுத்திருக்கிறார். பேட்டிங்கில் இன்று பட்டையை கிளப்பிய அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் 13 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் போன்ற சாதனையை அபிஷேக் ஷர்மா படைத்தார்.
54 பந்துகளை எதிர் கொண்டு 135 ரன்கள் விளாசிய அபிஷேக் ஷர்மா பந்து வீச்சிலும் மூன்று ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்," இது என்னுடைய ஸ்பெஷல் இன்னிங்ஸ்களில் ஒன்று. நாட்டுக்காக இப்படி விளையாடுவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அன்றைய நாள் என்னுடையது என எனக்குத் தோன்றினால், முதல் பந்தில் இருந்து நான் அதிரடியாக விளையாட முயற்சி செய்வேன்".
"இதற்கு என்னுடைய பயிற்சியாளரும் கேப்டனும் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றார்கள். என்னை ஏன் போக்கிற்கு விளையாட பயிற்சியாளரும் கேப்டனும் ஊக்கம் அளிக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே நான் இப்படித்தான் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு இருப்பதால்தான் என்னால் எந்த பயமும் இன்றி அதிரடியாக விளையாட முடிகிறது".
"இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் போது நாம் அதை எதிர்கொள்ள கொஞ்சம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். பந்திற்கு ஏற்ற வகையில் ரியாக்ட் செய்தாலே போதும் அதற்கு தகுந்தார் மாதிரி நமது ஷாட்டை அடிக்க வேண்டும்".
"ஆர்ச்சர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரை கவர் திசையில் அடிக்கும் போது மகிழ்ச்சியாக தான் இருந்தது. இதேபோன்று ஆதில் ரசித்துக்கு எதிராக நான் அடித்த ஒரு சாட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய இன்னிங்ஸ் பார்த்து என்னுடைய குரு யுவராஜ் மகிழ்ச்சி கொண்டிருப்பார் என நம்புகிறேன்.
யுவராஜ் எப்போதுமே நான் களத்தில் 15 அல்லது 20 ஓவர் வரை நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என சொல்வார். அதைத்தான் நான் இன்று செயல்படுத்தினேன்" என அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார்.