மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து டிரா செய்தது. நான்காவது டெஸ்டின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை இழக்காமல் நீண்ட நேரம் பேட்டிங் செய்து வந்தனர். அப்போது, இங்கிலாந்து அணி சில தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய முயன்றபோது, அதைக் கண்டுபிடித்த அம்பயர் அவர்களை எச்சரித்தார். இந்தச் சம்பவம் இங்கிலாந்து அணியின் முகமூடியை கிழித்தெறிந்துவிட்டது.
கிரிக்கெட்டை உருவாக்கிய நாடு, விளையாட்டு தர்மத்தைக் கடைப்பிடிக்கும் நாடு எனத் தங்களைத் தாங்களே கிரிக்கெட்டின் உரிமையாளர்களாகக் கருதிவரும் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடரில் பலமுறை இது போன்ற தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டது. நான்காவது டெஸ்டின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களையும், இங்கிலாந்து அணி 669 ரன்களையும் எடுத்திருந்தன. இந்திய அணி 311 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் தொடங்கியது. சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், ஐந்தாவது நாள் வரை சென்ற போட்டி இந்தியாவுக்குச் சாதகமாகவே இருந்தது.
ஆனால், ஐந்தாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து, விக்கெட்டைப் பறிகொடுக்காமல் சிறப்பாக ஆடி வந்தனர். அப்போது அவர்கள் 122 ரன்கள் சேர்த்து ஆடி வந்த நிலையில், அவர்களது பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாத விரக்தியில் இருந்த இங்கிலாந்து அணி ஒரு தில்லுமுல்லு வேலையைச் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர் ஜாக் கிரவ்லி மற்றும் மூத்த வீரர் ஜோ ரூட் ஆகியோர் பந்தை, ஆடுகளத்தில் சொரசொரப்பாக இருந்த ஒரு பகுதியில் வீசினர். பந்து அந்த இடத்தில் பிட்ச் ஆகி செல்லும் வகையில் திட்டமிட்டு வீசினார்கள். பொதுவாக, ஃபீல்டிங் செய்யும்போது பந்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பிட்ச் செய்து வீசுவது இயல்பான ஒன்றுதான்.
ஆனால், இவர்கள் திட்டமிட்டு பந்து குறிப்பிட்ட சொரசொரப்பான இடத்தில் நன்கு பிட்ச் ஆகிச் செல்லுமாறு வீசினார்கள். இதற்கு காரணம், அந்தச் சொரசொரப்பான பகுதியில் பந்து படும்போது அதன் ஒரு பக்கத்தில் தேய்மானம் உண்டாகும். அதன் மூலம் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும்.
அப்போது ஐந்தாம் நாளில் 28 ஓவர்கள் மீதமிருந்தன. அந்தச் சமயத்தில் அவர்களது நடவடிக்கையைக் கவனித்த அம்பயர், ஜாக் கிரவ்லியை அழைத்து எச்சரித்தார். அதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் அந்தச் செயலைச் செய்வதை நிறுத்தினர். இறுதியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று, தங்களின் சதத்தையும் நிறைவு செய்தனர்.
இந்திய அணி இந்தப் போட்டியை வெற்றிகரமாக டிரா செய்தது. இங்கிலாந்து அணியின் இதுபோன்ற செயல்கள் விளையாட்டு தர்மத்துக்கு எதிராக உள்ளன. இனி அந்த அணி விளையாட்டு தர்மத்தைப் பற்றிப் பேசினால், அது கேலிக்குரிய விஷயமாகவே இருக்கும்.