லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இதில் முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அது மட்டும் இல்லாமல் பும்ரா இல்லாத நிலையில் இந்தியா விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை சிராஜ் கைப்பற்றினார்.
நடப்பு தொடரில் சிராஜ் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார். சிராஜின் இந்த சிறப்புமிக்க சம்பவத்தை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. சச்சின் டெண்டுல்கர், சிராஜை சூப்பர் மேன் என்று பாராட்டி உள்ளார்.

இதேபோன்று விராட் கோலி சிராஜின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் பாராட்டி புகழ்ந்துள்ளார். இதனிடையே சிராஜுக்கு வந்த வாழ்த்திலேயே ஒரு பெண்ணின் வாழ்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல பாடகி ஆசா போஸ்லேவின் பேத்தியான ஜனாய் போஸ்லே, முஹமது சிராஜுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதில் உன்னை நினைத்து பெருமை கொள்கின்றேன். என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி இதய எமோஜியை அவர் போட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். இருவரும் ஏற்கனவே டேட்டிங் சென்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில், இந்த வாழ்த்து பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே இருவரும் காதலிக்கவில்லை என்றும் அண்ணன் தங்கை போல் தான் பழகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து ஏற்கனவே ஜனாய் போஸ்லே, கடந்த சில மாதத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் முஹமது சிராஜை தன்னுடைய அன்புடைய அண்ணா என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். முகமது சிராஜிக்கு 31 வயது ஆகும் நிலையில் ஜனாய் போஸ்லேக்கு 23 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.