லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் டெஸ்ட் கொண்ட் தொடரில் இந்திய அணி வரும் 20ஆம் தேதி முதல் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான பயிற்சி செய்யும் விதமாக கெண்ட் மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே பேட்ஸ்மேன்களை விட பவுலர்களுக்கு தான் மிகவும் முக்கியத்துவம் இருக்கும். ஏனென்றால் எதிர் அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே உங்களால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

இந்த நிலையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய அணியின் பௌலிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சிராஜ், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டி போன்ற வீரர்கள் இருப்பதால் இம்முறை இந்திய அணி சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சர்பராஸ் கான் உடைத்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதில் இந்திய ஏ அணியில் விளையாடிய நட்சத்திர வீரர் சர்பராஸ்கான் 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதில்15 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என இந்திய சீனியர் வீரர்களின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்து இருக்கின்றார்.
குறிப்பாக இந்திய சீனியர் அணியின் முகமது சிராஜ் ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருப்பது தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் சிறந்த பவுலர் என்று வர்ணிக்கப்படும் பும்ரா, ஒரு விக்கெட் கூட பெறாமல் ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட ஐந்து ரன்களை கொடுத்திருக்கிறார்.
இந்திய வீரர் நிதிஷ்குமார் மட்டும்தான் ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இதனால் இந்தியாவின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போல் ஆடிவரும் நிலையில், இந்திய அணி இந்த மாதிரி ஒரு வேகப்பந்து வைத்து இங்கிலாந்தை எதிர்கொண்டால் அவ்வளவு தான் கதை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.