டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சகாப்தம்..அயர்லாந்துக்கு எதிராக யாரும் செய்யாத சாதனை படைத்த அபிஷேக்
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா புதிய சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் ஐந்து அரைசதங்களை விளாசிய (Full Member nation) முதல் பேட்டர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இடதுகை தொடக்க ஆட்டக்காரரரான அபிஷேக் வெறும் 19 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். முழு உறுப்பினர் நாட்டைச் சேர்ந்த வேறு எந்த பேட்டரும் இந்த சாதனையை மூன்று முறைக்கு மேல் செய்ததில்லை. இதன் மூலம் அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

யுவராஜ் சிங், டேவிட் வார்னர், பில் சால்ட், கொலின் முன்ரோ, தசுன் ஷனகா மற்றும் ஃபின் ஆலன் உள்ளிட்ட டி20 கிரிக்கெட்டின் முன்னணி வீரர்கள் கூட தலா மூன்று முறை மட்டுமே இத்தகைய அதிவேக அரைசதங்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டாவது ஓவரில் டீப் மிட்-விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக ஒரு புல் ஷாட் அடித்து அபிஷேக் இந்த மைல்கல்லை எட்டினார். இந்திய பெவிலியனில் இருந்து அவருக்கு சக வீரர்கள் எழுந்து நின்று பாராட்டுக்களை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மைதானத்தில் இருந்தவாறே அவர் தனது கட்டைவிரலை உயர்த்தி நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன் அயர்லாந்துக்கு எதிராக அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக டி20 அரைசதமாகவும் இது பதிவானது. இதற்கு முன்னதாக 2014-ல் ஸ்டீபன் மைபர்க் 17 பந்துகளிலும், 2023-ல் லிட்டன் தாஸ் 18 பந்துகளிலும் அயர்லாந்துக்கு எதிராக அதிவேக அரைசதங்களை விளாசியிருந்தனர்.
அயர்லாந்துக்கு எதிராக அதிவேக டி20 அரைசதங்கள் (பந்துகளின் அடிப்படையில்)
| பந்துகள் | வீரர் | இடம் மற்றும் ஆண்டு |
|---|---|---|
| 17 | ஸ்டீபன் மைபர்க் | சில்ஹெட், 2014 |
| 18 | லிட்டன் தாஸ் | சட்டோகிராம், 2023 |
| 19 | அபிஷேக் சர்மா | பெல்ஃபாஸ்ட், 2026 |
| 20 | பில் சால்ட் | மலாஹைட், 2025 |
மைல்கல்லை எட்டியவுடன் முடிந்த அதிரடி
இருப்பினும், இந்த கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அரைசதம் கடந்த மூன்று பந்துகளிலேயே, அபிஷேக் சரியாக 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தனது அதிரடியான ஆட்டத்தில் அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார்.
அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் மெக்கார்த்தி வீசிய பந்தை அபிஷேக் தவறான டைமிங்கில் அடிக்க முயல, டீப் மிட்-விக்கெட்டில் மேத்யூ ஹம்ப்ரிஸ் கேட்ச் பிடித்தார். இது சர்வதேச டி20 போட்டியில் லியாம் மெக்கார்த்தியின் முதல் விக்கெட்டாகும்.
விக்கெட்டை இழந்தாலும், 25 வயதான அபிஷேக் சர்மா அதற்குள் அயர்லாந்து அணிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்திய அணிக்கு மற்றொரு சிறப்பான தொடக்கத்தை பெற்றுத் தந்த அவர், பவர்பிளே ஓவர்களில் உலகின் மிக ஆபத்தான பேட்டர்களில் தான் ஏன் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, அயர்லாந்தை 182 ரன்களுக்கு (9 விக்கெட் இழப்புக்கு) கட்டுப்படுத்தியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இதற்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.
வேகப்பந்து வீச்சில் அசத்திய ஹர்ஷித் ராணா 24 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் டெக்டர், ரோஸ் அடேர் மற்றும் 50 ரன்கள் எடுத்த கேப்டன் லார்கன் டக்கர் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் முக்கிய தருணங்களில் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டக்கர் மற்றும் காரெத் டெலானியின் அதிரடியால் அயர்லாந்து அணி ஒரு கட்டத்தில் 190 ரன்களை கடக்கும் என அச்சுறுத்தியது. டெலானி 49 ரன்கள் எடுத்தார். எனினும், இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு அவர்களைக் கட்டுப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தை தந்தார். அவர் 20 பந்துகள் மட்டுமே களத்தில் இருந்தபோதிலும், ஒரு புதிய சாதனையை படைத்து, டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் என்ற தனது அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications

