வைபவ் சூர்யவன்ஷி தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் பிசிசிஐ கூட்டம்.. ஜூன் 6இல் முக்கிய அணித் தேர்வு
மும்பை: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்வதற்கான முக்கியக் கூட்டம் ஜூன் 6 சனிக்கிழமை அன்று மும்பையில் நடைபெற உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு பங்கேற்கும் இக்கூட்டத்தில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் அயர்லாந்துக்குச் சென்று 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்களைத் தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழுவினர் ஜூன் 6 அன்று கூடுகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் ஜூலை 1 முதல் 11 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு?
இந்தத் தேர்வில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் இடதுகை பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி மீதுதான் உள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதுடன், வளர்ந்து வரும் சிறந்த வீரர் மற்றும் தொடரின் மதிப்புமிக்க வீரர் விருதுகளையும் வைபவ் தட்டிச் சென்றார். இதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடிக்கும் மிக இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் தலைஎழுத்தை இந்த கூட்டம் தீர்மானிக்கப் போகிறது.
தேர்வுக்குழுவுக்கு உள்ள சவால்கள்
வைபவ் சூர்யவன்ஷியின் அபார ஆட்டத்திறன் தேர்வுக்குழுவினரை கவர்ந்திருந்தாலும், அவரை ஆடும் லெவனில் சேர்ப்பதில் பெரிய சவால் உள்ளது. சமீபத்திய டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்வரிசை வீரர்களான அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் தற்போதும் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளனர். இவர்களை நீக்கிவிட்டு வைபவுக்கு இடம் கொடுப்பது கடினம் என்பதால், துவக்க வீரர்களை சுழற்சி முறையில் களம் இறக்க அஜித் அகர்கர் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
புதிய கேப்டன் மற்றும் ஆசிய போட்டிகள்
மறுபுறம், சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், செப்டம்பர் 2026 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதே நேரத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விளையாட உள்ளது. இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முதன்மை அணியை அனுப்புவதா அல்லது மாற்று அணியை அனுப்புவதா என்பது குறித்தும் ஜூன் 6 கூட்டத்தில் அஜித் அகர்கர் முடிவெடுக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications
