IND Vs IRE: ஒரு ஓவர் வீசவா இந்த 26 வயது வீரரை அணியில் வச்சிருக்கீங்க? - அஸ்வின் கேள்வி
சென்னை: டி20 போட்டிகளில் இந்திய அணி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அணி நிர்வாகம் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி ஆதரவளித்து வந்தாலும், இந்த 26 வயது வீரருக்கான சரியான ரோலை இன்னும் கண்டறியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில போட்டிகளில் சுந்தருக்கு ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பு கிடைப்பதில்லை என்று குறிப்பிட்ட அஸ்வின், அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் சுந்தர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசி 19 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்பதையும் நினைவு கூர்ந்தார்.

தனது 'ஆஷ் கி பாத்’ (யூடியூப் பக்கத்தில் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பு குறித்து பேசிய அஸ்வின், “இந்திய அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தருக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்திய அணியில் அவருக்கான இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அணியில் சுந்தர் இருந்தாலும் அவருக்கான சரியான ரோல் இன்னும் கிடைக்கவில்லை என்றே நான் உணர்கிறேன். அவர் மைதானத்தில் இருந்தாலும், சில நேரங்களில் அவருக்கு ஒரே ஒரு ஓவர் மட்டுமே வழங்கப்படுகிறது, அல்லது சில போட்டிகளில் ஒரு ஓவர் கூட கிடைப்பதில்லை” என்று கூறினார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பேட்டிங்கிலும் சுந்தரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை; அவர் 12 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
“அவர் ஒரு ஃபினிஷர் கிடையாது” – அஸ்வின் கேள்வி
இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 6-வது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். இடதுகை பேட்டரான அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல், 75 என்ற மிகக் குறைவான ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட்டமிழந்தார். சுந்தரை ஒரு ஃபினிஷராகப் பயன்படுத்துவது தவறான முடிவு என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது பதவிக்காலத்தில் அக்சர் படேலை பயன்படுத்தியதைப் போல, தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரையும் ஒரு 'புளோட்டராக’ (Floater) பேட்டிங் வரிசையில் சூழலுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
“உலகக் கோப்பையின் போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் துணைக் கேப்டன் அக்சர் படேல் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். அந்த அளவுக்கு சுந்தருக்குப் பின்புல ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால், பேட்டிங்கில் அவரை ஒரு ஃபினிஷராகப் பயன்படுத்துகிறார்கள்; உண்மை என்னவெனில் அவர் ஒரு ஃபினிஷர் கிடையாது. ராகுலும் ரோஹித்தும் அக்சரை பயன்படுத்தியதைப் போல இவரையும் ஒரு புளோட்டராகப் பயன்படுத்த வேண்டும். சுந்தருக்கான பங்கைத் தேர்ந்தெடுப்பதில் அணி நிர்வாகம் சற்று தவறான முடிவை எடுப்பது போல் தோன்றுகிறது” என்று அஸ்வின் மேலும் குறிப்பிட்டார்.இந்தத் தொடரின் இறுதி டி20 போட்டி அதே மைதானத்தில் ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications

