மும்பை: உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, ஜூன் மாதம் அயர்லாந்துக்குச் சென்று டி20 தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை அயர்லாந்தின் கிரிக்கெட் இயக்குனர் கிரகாம் வெஸ்ட் உறுதிப்படுத்தினார்.
இத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியானதுடன், அயர்லாந்து டி20 அணியின் கேப்டன் பால் ஸ்டர்லிங் தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஜூன் 20ஆம் தேதி முடிவடையும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பிறகு, இந்தியா இங்கிலாந்துக்குச் செல்லும். அங்கு ஜூலை 1 முதல் 19 வரை ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாகவே அயர்லாந்துடனான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.இந்தியாவுக்கு எதிரான இந்தத் போட்டி தங்கள் கோடைக்காலத் திட்டங்களின் ஒரு பகுதி என்று கிரகாம் வெஸ்ட் குறிப்பிட்டார். "2028 டி20 உலகக் கோப்பைக்கான தகுதி உறுதிசெய்யப்பட்ட நிலையில், பால் ஸ்டர்லிங் கேப்டன் பதவியிலிருந்து விலகியதன் மூலம், புதிய கேப்டன் தங்கள் பாணியையும் வழிமுறைகளையும் செயல்படுத்தத் தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஜூன் மாதம் நடைபெறும் இந்தியத் தொடரில் இருந்தே தொடங்கும்," என்று அவர் ஒரு பத்திரிகை அறிக்கையில் தெரிவித்தார். கடந்த ஏழு ஆண்டுகளில் (2018, 2022, 2023) இந்தியா மூன்று முறை அயர்லாந்து சென்றுள்ளது. டப்ளினுக்கு அருகிலுள்ள மாலாஹைட் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் ரசிகர்கள் அதிக அளவு போட்டிகளை பார்த்துள்ளனர்.
கேப்டன் பதவி விலகல் குறித்து பேசிய பால் ஸ்டர்லிங் "இந்த வடிவிலான கிரிக்கெட்டில் அயர்லாந்தை வழிநடத்தியது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அதைச் செய்ததில் நான் பெருமைப்படுகிறேன். ஒரு நாட்டிற்கு கேப்டனாக இருப்பது பெரிய பொறுப்பும் கொண்டது. எனது பதவிக்காலத்தில் கிடைத்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்," என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடந்த ஏமாற்றமளிக்கும் டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தின் செயல்பாடுகளை தொடர்ந்து ஸ்டர்லிங் தனது கேப்டன் பதவியை துறந்தார். அந்தத் தொடரில் அயர்லாந்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, ஓமானை வீழ்த்தியது. ஜிம்பாப்வே உடனான கடைசிப் போட்டி கைவிடப்பட்டது.

டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், பால் ஸ்டர்லிங் ஒருநாள் போட்டிகளில் அயர்லாந்தை தொடர்ந்து வழிநடத்துவார். மேலும், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்."ஒரு வீரராக எனக்கு இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இந்த முடிவு களத்தில் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தி, வலுவான பங்களிப்பைச் செய்ய முழுமையாக கவனம் செலுத்த அனுமதிக்கும் என நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூடுதலாகத் தெரிவித்தார்.