IND vs IRE: ஸ்ரேயாஸ் சொன்ன வார்த்தை.. கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவார் என்று உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், அவருக்குப் பிளேயிங் லெவனில் இடம் வழங்கப்படவில்லை. இது மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறும் இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பில் டிக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பாரிஸ் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் குவிந்ததால், மைதானத்தில் கூடுதல் இருக்கைகளும் அமைக்கப்பட்டன.

உலகக் கோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. டாஸின் போது வைபவ் சூர்யவன்ஷி விளையாடுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "துரதிர்ஷ்டவசமாக வைபவ் இன்று விளையாடவில்லை. சரியான நேரம் வரும்போது அவருக்குக் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன இந்த வார்த்தையை கேட்ட ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.
இந்தப் போட்டிக்கு முந்தைய நாள் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "வைபவ் சூர்யவன்ஷிக்கு உரிய நேரத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், அவருக்கு வாய்ப்பு தருவதற்காக ஏற்கனவே அணியில் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்து வரும் வீரர்களை நீக்குவது சரியாக இருக்காது" என்று விளக்கமளித்திருந்தார்.
ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் அதிரடியாக விளையாடி உலகையே வியக்க வைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியைத் தொடக்க வீரராகக் களம் இறக்க வேண்டும் என்றால், தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மா ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டும். தகுதி வாய்ந்த வீரர்களை நீக்கிவிட்டு வைபவ்வுக்கு இடம் தருவது நியாயமாக இருக்காது என்ற கொள்கையை இந்திய அணி நிர்வாகம் கடைப்பிடித்துள்ளது. இதனால், வைபவ் சூர்யவன்ஷி தனது சர்வதேச அறிமுகத்திற்காக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
