நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலியால் துடித்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவர் பாதி பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதை அடுத்து ரசிகர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது?

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அயர்லாந்து அணிகள் மோதிய குரூப் சுற்று போட்டி நாசா கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்த அயர்லாந்து அணி, நியூயார்க் மைதான பிட்ச்சை சமாளித்து ஆட முடியாமல் திணறி இருந்தது.
இந்திய அணியின் பேட்ஸ்மன்களுக்கும் இந்த நிலை வரலாம் என்ற சந்தேகம் இருந்தது. எனினும், கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். துவக்க வீரராக இறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்த நிலையில் ரிஷப் பண்ட்-உடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மூன்று சிக்ஸ், நான்கு ஃபோர் அடித்தார். 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.
சரியாக பத்து ஓவர்களில் இந்திய அணி 76 ரன்களை சேர்த்தது. அப்போது ரோஹித் சர்மா தோள் பட்டையில் வலி ஏற்பட்டு துடித்தார். பின்னர் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அவரை பரிசோதித்தார். அதன் பின் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடியாத நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சின் போது ரோஹித் சர்மா ஒரு கேட்சை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது கீழே விழுந்த அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த வலியுடன் பேட்டிங் செய்த அவர் அரை சதம் அடித்த நிலையில் வலி தாங்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றதை அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் சிவம் துபே மற்றும் ரிஷப் பண்ட் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரிஷப் பண்ட் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.