நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியிலேயே துணை கேப்டன் ஹர்ஹ்டிக் பாண்டியா "சைலன்ட் கில்லர்" ஆக முத்திரை பதித்தார். அதிலும் பந்து வீச்சில் அவர் மீது இருந்த விமர்சனங்களை அடித்து உடைத்து இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ" பிரிவில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், பேட்டிங் செய்ய திணறிய அயர்லாந்து அணி முதல் மூன்று ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்களை இழந்தது.

அடுத்த அந்த அணி நிதானமாக ஆடி வந்த நிலையில், ஏழாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா அந்த ஓவரில் லோர்கன் டக்கர் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் பவுல்ட் அவுட் முறையில் அவர் வீழ்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடர்ந்து அதிரடியாக ரன் குவிக்க முயன்ற கர்டிஸ் கேம்பர் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின், மார்க் அடேர் விக்கெட்டை வீழ்த்தினார். 4 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியா அதில் ஒரு மெய்டன் ஓவரை வீசி இருந்தார். 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இடையே அதிக விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். அவர் மூன்று விக்கெட்களை வீழ்த்தும் போதும் பெரிதாக கொண்டாடவில்லை. மிகவும் அமைதியாகவே காணப்பட்டார். அந்த வகையில் சைலன்ட் கில்லர் ஆக அவர் சாதித்து இருக்கிறார். இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், பும்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். முகமது சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.