நியூயார்க் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா கைப்பற்றியதால் ரோஹித் சர்மாவுக்கும் அவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் உள்ளது. இந்த நிலையில், 2024 டி20 உலகக் கோப்பையில் இருவரும் ஒன்றாக, ஒரே அணியில் விளையாட உள்ளனர்.
அதிலும் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் விளையாட உள்ளனர். அவர்கள் இருவருக்கும் சரியான பேச்சுவார்த்தை உள்ளதா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியிலும் அவர்கள் இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான் துணை கேப்டன் போல அவ்வப்போது ரோஹித் சர்மாவுடன் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரிவால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை குரூப் சுற்று போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு முக்கிய விஷயத்தை செய்து இருக்கிறார்.
வலைப் பயிற்சியின் போது ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியாவை அழைத்த அவர், ரோஹித் சர்மாவுக்கு பந்து வீசுமாறு கூறினார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தனியாக சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு பந்து வீச்சில் சில ஆலோசனைகளை அளித்தார். அதேபோல ஹர்திக் பாண்டியாவும், ரோஹித் சர்மாவுடன் பேசினார்.
இந்த காட்சிகளை கண்டு இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை தனிப்பட்ட வீரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அது இந்திய அணியை பாதிக்கக் கூடாது. இந்திய அணியில் ஆடும் போது வீரர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே அணியாக, நாட்டுக்காக விளையாடுவதை மனதில் எண்ணி விளையாட வேண்டும். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் அதை உறுதி செய்ய வேண்டும்.
ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருமே கடந்த ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை. அவர்கள் இருவரும் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் ஃபார்மை மீட்க வேண்டிய அவசியமும் உள்ளது.