டெல்லி: டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - நமீபியா கிரிக்கெட் போட்டியின் போது, குளிர்பானம் விற்பனை செய்யும் நபர் ஒருவர் செய்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) இது குறித்து அவசர விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த குளிர்பான விற்பனை நிலையத்தில் இருந்த ஊழியர் ஒருவர், டம்ளர்களில் மீதமிருந்த குளிர்பானத்தை மீண்டும் பாட்டிலில் ஊற்றுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள், "எச்சில் ஜூஸை மீண்டும் பாட்டிலில் ஊற்றி விற்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பி கடும் கோபமடைந்தனர்.

மைதானத்திற்குள் அதிக விலை கொடுத்து உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்கும் நிலையில், இப்படி ஒரு சுகாதார சீர்கேடு நடப்பதா என்று சமூக வலைதளங்களில் பலரும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தை வறுத்தெடுத்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்கம் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோ தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர் விற்பனைக்காகக் குளிர்பானத்தை மீண்டும் நிரப்பவில்லை என்றும், குப்பை சேகரிக்கும் முறையின் ஒரு பகுதியாகவே அப்படிச் செய்தார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மைதானத்தில் சேரும் குப்பைகளை ஈரக் கழிவு மற்றும் உலர் கழிவு என தரம் பிரிக்கும் பணி நடைபெறுகிறது. அந்த வீடியோவில் உள்ள ஊழியர், டம்ளர்களில் மீதமிருந்த குளிர்பானத்தை (திரவக் கழிவு) தனியாகவும், காலி பாட்டில்களை (பிளாஸ்டிக் கழிவு) தனியாகவும் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். விற்பனைக்காக அல்லாமல், குப்பைகளைக் கொட்டுவதற்கு வசதியாகவே அவர் மீதமிருந்த பானத்தை ஒரு பாட்டிலில் சேகரித்தார்," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த பாட்டில்கள் மீண்டும் விற்பனைச் சுழற்சிக்கு அனுப்பப்படவில்லை என்றும், அவை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மைதானத்தில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும், சுகாதார விதிமுறைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுவதாகவும் டெல்லி கிரிக்கெட் சங்கம் உறுதியளித்துள்ளது. கோகோ கோலா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலமே இவை விற்கப்படுவதாகவும், ரசிகர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.