டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பையைத் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்து, நமீபியா அணியின் ஆலோசகர் கேரி கிர்ஸ்டன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவால் அவதிப்படுவதால், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், தான் சந்தித்த முதல் சில பந்துகளிலேயே அதிரடியைக் காட்டினார்.

வெறும் 7 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி மிரட்டினார். ஆனால் 8வது பந்திலேயே நமீபியா விரித்த வலையில் அவர் சிக்கிக்கொண்டார். நமீபியா பந்துவீச்சாளர் பென் ஷிகோங்கோ வீசிய பந்தை சஞ்சு சாம்சன் தூக்கி அடிக்க முயன்றார். அது காலில் படும் வகையில் வீசப்பட்ட மெதுவான பந்து.
சஞ்சு சாம்சன் அந்தப் பந்தை லெக் சைடில் தூக்கி அடித்தார். ஆனால் பந்து எல்லைக்கோட்டைத் தொடாமல் டீப் மிட் விக்கெட் திசையில் நின்றுகொண்டிருந்த லாரன் ஸ்டீன்காம்ப் கைகளில் தஞ்சம் அடைந்தது. சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது நமீபியா அணி சஞ்சு சாம்சனுக்காகத் திட்டமிட்டுச் செயல்படுத்திய வியூகம் போலவே இருந்தது.
சஞ்சு சாம்சன் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, கேமரா நமீபியா அணியின் அறை பக்கம் திரும்பியது. அங்கே அமர்ந்திருந்த நமீபியா அணியின் ஆலோசகரும், முன்னாள் இந்தியப் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தார்.
பொதுவாக உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத கேரி கிர்ஸ்டன், இப்படிச் சிரித்தது அவர்கள் போட்ட திட்டம் துல்லியமாக வேலை செய்ததைக் குறிப்பதாகவே அமைந்தது. ஏற்கனவே அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் சர்மா இதேபோலத் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டார். தற்போது சஞ்சு சாம்சனும் அதேபோல ஒரு மெதுவான பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.
நியூசிலாந்துத் தொடரில் மோசமான ஆட்டத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு, இது தன்னை நிரூபிப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாகத் தொடங்கினாலும், அவரால் நீண்ட நேரம் நிலைத்து நின்று பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்களும் விளாசினர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 209 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.