டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இடையே ஹர்திக் பாண்டியா மற்றும் நமீபியா கேப்டன் எராஸ்மஸ் இடையே நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் அதை இலகுவாக எடுத்துக் கொண்டு சென்றனர்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் நடுவே நடந்த அந்த "மோதல்" மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலகலப்பான சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நமீபியா கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பந்துவீசினார். அப்போது ஸ்ட்ரைக்கர் முனையில் சிவம் துபேவும், நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் ஹர்திக் பாண்டியாவும் இருந்தனர். எராஸ்மஸ் வீசிய பந்தை சிவம் துபே மெதுவாகத் தட்டிவிட்டார்.
அந்தப் பந்தைத் தடுப்பதற்காக எராஸ்மஸ் வேகமாக ஓடிவந்து டைவ் அடித்தார். அதே நேரத்தில் ரன் எடுப்பதற்காக ஹர்திக் பாண்டியாவும் வேகமாக ஓடி வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் சமநிலையை இழந்த ஹர்திக் பாண்டியா, கீழே விழுந்த எராஸ்மஸ் மீது விழுந்தார்.
பொதுவாக இதுபோன்ற நேரங்களில் வீரர்கள் கோபப்படுவது அல்லது வலி ஏற்பட்டு முகம் சுளிப்பது வழக்கம். ஆனால், ஹர்திக் பாண்டியா தன் மீது விழுந்தவுடன், நமீபியா கேப்டன் எராஸ்மஸ் கோபப்படாமல், அப்படியே மைதானத்தில் படுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது போல 'புஷ்-அப்' எடுக்கத் தொடங்கினார்.
இதைப் பார்த்த ஹர்திக் பாண்டியாவும் சிரித்துக்கொண்டே எழுந்து அவருக்கு கை கொடுத்தார். மைதானத்தில் இருந்த இறுக்கமான சூழலை இந்தச் சம்பவம் தணித்தது. இருவரும் சிரித்துக்கொண்டே மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
இருவரும் வேடிக்கையாக நடந்து கொண்டாலும், தங்கள் பங்களிப்பில் சிறப்பாகவே செயல்பட்டனர். இந்திய அணி தரப்பில் இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 209 ரன்களை எட்ட உதவினார்.
மறுபுறம் நமீபியா கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சில் மிரட்டினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் நமீபியா அணி 116 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.