டெல்லி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து பத்து போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.
இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா எட்டு முறை வென்றிருந்ததை சாதனையாக இருந்தது. இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்கள் அனைவருக்கும் இது நல்ல போட்டியாக அமைந்தது.

பேட்டிங் செய்ய இது ஒன்றும் சுலபமான ஆடுகளம் கிடையாது. ஆனால் சாம்சன், இசான் கிஷன் ஆகியோர் ஆரம்பித்த விதம் இது ஒரு சுலபமான ஆடுகளம் என்பதை போல் உங்களுக்கு காட்டி இருக்கலாம். ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.
தொடர்ந்து இரண்டு, மூன்று விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவர்கள் ஆடிய விதத்தை பாராட்ட வேண்டும். அந்த சூழலில் ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. இந்த சூழலில் நமீபியா பவுலர்களுக்கு நான் முழு பாராட்டை கொடுக்காமல் இருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார்கள். சாதிக்க வேண்டும் என்ற வெறியில் அவர்கள் இன்று விளையாடினார்கள். அது நன்றாகவே தெரிந்தது.
எங்களுக்கு எதிராக நல்ல திட்டத்தை அமைத்து அதை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுடைய பந்து வீசும் முறையை பார்த்து நான் உண்மையிலே ஆச்சரியப்பட்டேன். நாங்கள் இரண்டு, மூன்று விக்கெட்டுகளை இழந்தோம். இறுதியில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தோம்.
பும்ரா நான்கு ஓவர்கள் முழுமையாக வீசியது நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல விஷயம் தான். அவர் அணிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அடுத்த போட்டியிலும் அவர் கண்டிப்பாக விளையாடுவார். வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இணைந்து நன்றாக பந்து வீசினார்கள். இந்த இணையை எதிரணி பேட்டர்கள் எதிர்கொள்வது உண்மையிலே நெருக்கடியாக தான் இருக்கும்.
அதுவும் புதிய பந்து, பழைய பந்து என அனைத்தையுமே இந்த வீரர்களால் பந்து வீச முடியும். மேலும் ஹர்திக் பாண்டியா இன்று விளையாடிய விதம் எங்கள் அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கிறது. புதிய பந்து, பழைய பந்து என இரண்டிலுமே அவரால் பந்து வீச முடியும். இதுபோல் ஒரு மனநிலையில் வந்து அவர் விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்று இருக்கிறார்.
இது இந்திய அணியை பொறுத்தவரை நல்ல விஷயம்ம் தற்போது வரை அணி சென்ற விதத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக தான் இருக்கின்றது. அடுத்தடுத்த போட்டிகளை நாங்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியுமே மிகவும் முக்கியமானது. நாங்கள் சிறு தடுமாற்றத்துடன் தான் இந்த தொடரை தொடங்கி இருக்கின்றோம். அதன் பின் நாங்கள் எங்களுடைய பாதையில் சரியாக செல்கின்றோம் என்று நம்புகிறேன் என சூரியகுமார் தெரிவித்துள்ளார்.