டெல்லி: 2026ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் 18வது ஆட்டத்தில், இந்திய அணி நமீபியாவை எதிர்கொண்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை நமீபியா தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன், தனது அதிரடி ஆட்டத்தால் வலுவான தொடக்கத்தை அளித்தார்.
பவர் பிளேயின் கடைசி ஓவரான ஆறாவது ஓவரில், ஜே.ஜே. ஸ்மித்தின் பந்துவீச்சை இஷான் கிஷன் அதிரடியாக எதிர்கொண்டார். அந்த ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை விளாசிய அவர், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியையும் அடித்து ஒரே ஓவரில் 28 ரன்களைக் குவித்தார். இது போட்டியின் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

மொத்தமாக 24 பந்துகளில் 61 ரன்கள் குவித்து இஷான் கிஷன், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறினார். சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணிக்கு தேவைப்பட்ட வலுவான அடித்தளத்தை அவர் அமைத்துக் கொடுத்தார். இதனால், பேட்டர்கள் ஆட்டமிழந்தால், ரன் குவிப்பில் பிரேக் போட வேண்டும் என்ற விதியை குப்பையில் போட்ட இந்தியா, களத்தில் பட்டாசை கொளுத்தியது.
நமீபியாவுடனான இந்த ஆட்டத்தில் இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா நம்பிக்கையுடன் களமிறங்கியது. சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் அந்த வெற்றி சாத்தியமானது.
இசான் கிஷனின் அதிரடியால் இந்திய அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. 20 பந்துகளில் இசான் கிஷன் அரைசதம் அடிக்க, 6.5 ஓவர்களில் எல்லாம் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இந்திய அணி 7.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்த போது இசான் கிஷன் ஆட்டமிழந்தார். அவர் இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் இருந்திருந்தால் அனைவரின் கணிப்பு படி இந்திய அணி 300 ரன்களை தொட்டிருக்கும்.