டெல்லி: டி20 கிரிக்கெட்டில் 'சிறிய அணி', 'கத்துக்குட்டி அணி' என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், திறமையில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்றும் நமீபியா அணியின் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்தே சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகின்றன.
நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் கடைசி வரை போராடி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டன. இந்நிலையில், டெல்லியில் பயிற்சியை முடித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நமீபியா கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், தங்களைப் போன்ற அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எராஸ்மஸ் கூறுகையில், "எங்களை நாங்களே சிறிய அணி என்று முத்திரை குத்திக்கொள்ளக் கூடாது. இந்த அடையாளங்களால் எங்களைக் கட்டுப்படுத்தாதீர்கள். நாங்களும் மனிதர்கள்தான், அவர்களும் அதே வெள்ளைப் பந்தில்தான் விளையாடுகிறார்கள். எங்களை நாங்கள் நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளன" என்றார்.
"2022 உலகக்கோப்பையில், ஆசிய கோப்பையை வென்று வந்த இலங்கை அணியை நாங்கள் வீழ்த்தினோம். அது அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி அல்ல. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராகவும் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். அதனால் இந்த 'சிறிய அணி' என்ற பட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்துப் பேசிய அவர், "இந்தியாவுடன் விளையாடும்போது எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் உலக சாம்பியன்கள். அதனால் எந்த அழுத்தமும் இல்லாமல் அந்தத் தருணத்தை ரசித்து விளையாடுவோம். நேர்மறையாக அணுகினால், சிறந்த முடிவுகள் கிடைக்கும். அமெரிக்கா எப்படி இந்தியாவுக்கு எதிராகப் போராடியது என்பதைப் பார்த்தோம். நாங்களும் இந்திய அணிக்கு சவால் விடுவோம்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
நமீபியா போன்ற அணிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய தடைக்கல், பெரிய அணிகளுடன் விளையாடப் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததுதான் என்று அவர் வேதனை தெரிவித்தார். "பெரிய அணிகளுடன் அடிக்கடி விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் அனுபவம் குறைவாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பையில் விளையாடும்போது அது ஒரு பெரிய பாய்ச்சலாகத் தெரிகிறது. இதைத்தான் எங்களால் சமாளிக்க முடியவில்லை. எங்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தால், சர்வதேச கிரிக்கெட் மேலும் வலுவடையும், அது அனைவருக்கும் நன்மை பயக்கும்" என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து நான்காவது முறையாக டி20 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள நமீபியா, அந்த நாட்டில் கிரிக்கெட் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு ஒரு சான்றாகும். கடந்த அக்டோபரில், தங்கள் அண்டை நாடான தென்னாப்பிரிக்காவை முதன்முறையாக வீழ்த்தி நமீபியா வரலாற்றுச் சாதனை படைத்தது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம்பெற்றுள்ள நமீபியா, தனது அடுத்த போட்டியில் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.