டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, நமீபியா அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்படும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக யாரை களமிறக்குவது என்பது குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது வித்தியாசமான கருத்தைத் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரைத் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வைரல் காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், அடுத்து பாகிஸ்தானுடன் முக்கியப் போட்டி இருப்பதால், இன்றைய நமீபியா போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் போட்டிக்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

பொதுவாக அபிஷேக் சர்மா இல்லையென்றால் சஞ்சு சாம்சனைத் தான் மாற்றுத் தொடக்க வீரராகக் களமிறக்குவார்கள். ஆனால் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "சஞ்சு சாம்சன் முழுமையாக ஃபார்மில் இல்லை. அவருக்குப் போதிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் அவர் எதையும் செய்யவில்லை. அதனால் அவரை நம்பிப் பயனில்லை. நான் கேப்டனாக இருந்தால் அவரைத் தேர்வு செய்ய மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக யாரை இறக்கலாம் என்பது குறித்தும் ஸ்ரீகாந்த் ஒரு புதுமையான யோசனையைத் தெரிவித்துள்ளார். "நான் கேப்டனாக இருந்தால் ஒரு வித்தியாசமான முடிவை எடுப்பேன். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வாஷிங்டன் சுந்தரைத் தொடக்க வீரராகக் களமிறக்குவேன். அவருக்குப் போதிய பயிற்சி தேவை. பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு அவர் ஒரு போட்டியில் விளையாடுவது அவசியம். சஞ்சு சாம்சனுக்குப் பதில் சுந்தரை ஓப்பனிங் இறக்குவதே சிறந்தது" என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஒருவேளை பாகிஸ்தான் போட்டிக்கு அபிஷேக் சர்மா வந்துவிட்டால், வாஷிங்டன் சுந்தரை 8வது இடத்தில் களமிறக்கலாம். அப்போது ரிங்கு சிங்கை அணியிலிருந்து நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சுந்தருக்கு ஒரு போட்டியிலாவது விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்" என்றார்.
கிரிக்கெட்டில் வெற்றி நடை மிகவும் முக்கியம். அபிஷேக் சர்மா விளையாடாதது அணிக்குப் பின்னடைவுதான். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது அவருக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கலாம் என்று ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார். ஸ்ரீகாந்தின் இந்தத் திட்டம் சற்றே விசித்திரமாக இருந்தாலும், நமீபியா போன்ற சிறிய அணிக்கு எதிராகப் பரிசோதித்துப் பார்ப்பதில் தவறில்லை என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.