மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி நமிபியாவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி விளையாட உள்ள நிலையில் அதற்கு முன்பு இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
இந்திய அணியில் நட்சத்திர வீரரான அபிஷேக் ஷர்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது திரும்பி இருக்கிறார். இதனால் அவர் இந்த ஆட்டத்தில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோன்று இஷான் கிசனுக்கு நேற்று பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது.

இதனால் அவருடைய உடல் தகுதி குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில் இரண்டு தொடக்க வீரர்களின் ஒருவர் இல்லை என்றால் கூட சஞ்சய் சாம்சனை தான் அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சஞ்சு சாம்சன் அணிக்குள் வர 100 சதவீதம் வாய்ப்பு இருக்கின்றது.
அதற்கு தகுதியான நபர். இந்த அணியில் இடம்பெறும் தகுதியை அவர் ஏற்கனவே சம்பாதித்து விட்டார். அபிஷேக் ஷர்மா உடல் தகுதியைப் பெறவில்லை என்றால் நிச்சயம் சஞ்சு சாம்சனை தான் பயன்படுத்த வேண்டும். தமக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.
ஏனென்றால் 2024 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். கடந்த சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். கிடைக்கும் வாய்ப்பில் அவர் சரியாக செயல்பட்டால், நிச்சயம் அது இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு நல்ல தலைவலியாக அமையும்.
அது மட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் அவருடைய ரசிகர்களுக்கும் அது எல்லையற்ற மகிழ்ச்சியை தரும். ஏனென்றால் சஞ்சு சாம்சனுக்கு அதிக அளவு ரசிகர்களும் ஆதரவும் நாடு தழுவிய அளவில் இருக்கின்றது. இதைப் போன்று பாகிஸ்தான் எதிரான மிகப்பெரிய போட்டிக்கு முன்பு பும்ரா கண்டிப்பாக ஒரு போட்டியில் ஆவது விளையாட வேண்டும். அப்போதுதான் பந்துவீசும் விதம் அவருக்கு இருக்கும். எவ்வளவு வேகத்தில் ஓட வேண்டும். எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து அவருடைய உடலை அறிந்து கொள்ளும்.
பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் அதற்கு முன்பு அவர் இந்த நான்கு ஓவரை கண்டிப்பாக வீச வேண்டும். எனவே நமிபியாவுக்க்ய் எதிரான போட்டி அவருக்கு நல்ல பலனை தரும். டெல்லி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், வெறும் பும்ராவை மட்டும் பயன்படுத்த கம்பீர் முடிவு எடுப்பார் என்று நினைக்கிறேன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.