டெல்லி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக இந்தியா அணியின் பேட்டிங் தடுமாறிய நிலையில், இந்த ஆட்டத்தில் முன்வரிசை வீரர்கள் பலரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
எனினும் கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. இந்த போட்டிக்கு முதல் நாள் செய்தியாளர்களை சந்தித்த நமிபியா அணி கேப்டன் ஏராஸ்மஸ், தங்களுக்கு இரவு நேரத்தில் பயிற்சி செய்ய ஐசிசி வாய்ப்பு அளிக்கவில்லை.

எனினும் நீங்கள் எவ்வாறு தடுத்தாலும் எங்களை தடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார். இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நமிபியா சிறப்பாக செயல்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தியாவின் அனுபவத்திற்கு நமிபியாவால் ஈடு கொடுக்க முடியவில்லை.
தோல்வி குறித்து பேசிய நமிபியா அணி கேப்டன் ஜெஹார்ட் எராஸ்மஸ், நாங்கள் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது பவர் பிளேவுக்கு பின்பு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.இதனால் பந்து வீச இந்திய அணி வீரர்கள் சிரமப்படுவார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நன்றாக விளையாடலாம் என்று நினைத்தோம்.
ஆனால் வருண் சக்கரவர்த்தி அந்தக் கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி எங்களுடைய பேட்டிங் முதுகெலும்பை உடைத்து விட்டார். எங்கள் அணியில் ஸ்மிட் நன்றாக பந்து வீசினார். இது போல் ஒரு செயல்பாடு தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.எங்கள் அணி 100% திறனை வெளிக்காட்டவில்லை. எங்கள் அணியில் நிறைய ஆக்ரோஷமான திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அது வெளிப்படவில்லை. எங்கள் அணி வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்திய அணியின் பவுலர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களின் திறனை அவர்கள் இன்று வெளிக் காட்டி இருக்கிறார்கள்.ஆறாவது ஓவரில் இருந்து பத்தாவது ஓவர் வரை அவர்கள் சிறப்பாக பந்து வீசி எங்களை உடைத்து விட்டார்கள் என்று ஏராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.