டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 240 ரன்களுக்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவு லீக் போட்டியில் நமீபியா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா இல்லாததால், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே இந்திய வீரர்கள் அதிரடியைக் கையில் எடுத்தனர். சஞ்சு சாம்சன் வெறும் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்ற இஷான் கிஷன், நமீபியா பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், வெறும் 24 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.
இஷான் கிஷனின் அதிரடியால் இந்திய அணி பவர் பிளே முடிவில் 86 ரன்களைக் குவித்தது. பின்னர் வந்த திலக் வர்மா 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதனால் நடு ஓவர்களில் ரன் வேகம் சற்று குறைந்தது.
அப்போது ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அரைசதம் கடந்தார். சிவம் துபே தனது பங்கிற்கு 16 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்.
18 ஓவர்கள் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்திருந்தது. ஆனால் கடைசி 2 ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது. 19வது மற்றும் 20வது ஓவர்களில் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். அடுத்து 20வது ஓவரில் சிக்ஸர்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 6 பந்துகள் பிடித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் ஆனார்.
கடைசி 11 பந்துகளில் மட்டும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. நமீபியா கேப்டன் எராஸ்மஸ் 4 ஓவர்கள் வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார். நமீபியா அணி வெற்றி பெற 210 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி நேரச் சரிவு இல்லையென்றால் இந்தியா இன்னும் பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்.