அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனை அடுத்து அபிஷேக் ஷர்மா மற்றும் இசான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவிப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த தொடரில் அவர் இன்னும் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.

அமெரிக்காவுக்கு எதிராக டக் அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, பாகிஸ்தானுக்கு எதிராகவும் ரன் சேர்க்காமல் பெவிலியன் திரும்பினார். இந்த சூழலில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தன்னுடைய பழைய ஆட்டத்தை அவர் வெளிக்கொண்டு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா வெறும் 3 பந்துகளை எதிர் கொண்டு கிளீன் போல்ட் ஆகி மீண்டும் 0 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் ஹாட்ரிக் டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற சோகமான சாதனையை அபிஷேக் ஷர்மா படைத்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா டி20 உலக கோப்பைக்கு முன்பு சாதாரண தொடர்களில் எல்லாம் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் நல்ல மதிப்பை பெற்றிருந்தார்.
ஆனால் டி20 உலக கோப்பை போன்ற முக்கியமான ஆட்டங்களில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறி வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் அழுத்தத்தை கையாளும் திறமை அபிஷேக் ஷர்மாவுக்கு இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனி சூப்பர் 8 சுற்றுப்போட்டிகள் தொடங்க உள்ளது.
இந்த ஒவ்வொரு போட்டியுமே அபிஷேக் ஷர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஆனால் அவர் இந்த தொடரில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்ற சோகமான சாதனையுடன் அவர் இருக்கின்றார். இதனால் அபிஷேக் ஷர்மாவை அணியிலிருந்து நீக்க வேண்டுமா? சஞ்சு சம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டுமா என்ற கவலை குரல்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.