அகமதாபாத்: 2026ஆம் ஆண்டு பிறந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்து மோசமான சாதனைப் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா, முதல் ஓவரிலேயே நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆரியன் தத் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 3 பந்துகளைச் சந்தித்த அவர் டக் அவுட் ஆனார்.

நெதர்லாந்து போட்டி விக்கெட்டையும் சேர்த்தால், 2026ஆம் ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மா 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை டக் அவுட் ஆன தொடக்க வீரர்கள் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
சயிம் அயூப் (பாகிஸ்தான், 2025) - 6 முறை
அபிஷேக் சர்மா (இந்தியா, 2026) - 5 முறை
குஷால் புர்தேல் (நேபாளம், 2024) - 5 முறை
பர்வேஸ் ஹொசைன் எமோன் (வங்கதேசம், 2025) - 5 முறை
பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப் 6 முறை டக் அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளார். அபிஷேக் சர்மா தற்போது 5 முறையுடன் இரண்டாவது இடத்தை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு இன்னும் 10 மாதங்கள் மீதமுள்ள நிலையில், அதற்குள் இன்னும் ஒரு முறை டக் அவுட் ஆனால் அபிஷேக் சர்மா முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
2026 உலகக்கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட். உடல்நலக்குறைவு காரணமாக நமீபியா போட்டியில் விளையாடவில்லை. பாகிஸ்தான் போட்டியில் 4 பந்துகளைச் சந்தித்து டக் அவுட். தற்போது நெதர்லாந்து போட்டியிலும் டக் அவுட். இவ்வாறு தான் விளையாடிய மூன்று உலகக்கோப்பை போட்டிகளிலுமே அவர் ரன் கணக்கைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டில் அபிஷேக் சர்மா இதுவரை 8 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இதில் 182 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிராக 84 ரன்கள் மற்றும் 68 ரன்களைக் குவித்துள்ளார். ஆனால், மீதமுள்ள 5 இன்னிங்ஸ்களிலும் அவர் டக் அவுட் ஆகியுள்ளார்.
அதிரடியாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் அவர் விக்கெட்டைப் பறிகொடுத்து வருகிறார். இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டாலும், முக்கியப் போட்டிகள் வரவுள்ள நிலையில், அணியின் தொடக்க வீரர் இப்படித் தொடர்ந்து சொதப்புவது அணி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.