பெங்களூர் : இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி, தன் மனைவி அனுஷ்கா சர்மா தனக்கு கை தட்ட மறுத்த நிலையில், எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்து அவரை திக்கு முக்காட வைத்தார்.
இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி பெங்களூரில் நடைபெற்றது. கத்துக்குட்டி அணிக்கு எதிரான இந்தப் போட்டி தீபாவளி அன்று நடைபெற்றது என்பதால் பெரிய சம்பவத்துக்காக காத்துக் கொண்டு இருந்தனர் இந்திய ரசிகர்கள். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் போட்டியை நேரில் காண மைதானம் வந்து இருந்தார்.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா 410 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் அரைசதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் சதம் அடித்தனர். அடுத்து நெதர்லாந்து அணி சேஸிங் செய்த போது முகமது சிராஜ் காயத்தால் மைதானத்தை விட்டு வெளியே சென்றார். அப்போது கோலியை பந்து வீச அழைத்தார் ரோஹித் சர்மா.
முதல் ஓவரை விராட் கோலி வீசிய போது 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அப்போது ஓவர் முடிவில் தன் மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்தார் விராட் கோலி. அனுஷ்கா அவர் ஓவர் வீசியதற்கு கை தட்டவில்லை என்பதை கண்டு, ஏன் கை தட்டக் கூடாதா? என சைகை செய்தார். அப்போதும் அனுஷ்கா சர்மா கை தட்டவில்லை.

அடுத்து மீண்டும் அவருக்கு ஓவர் கொடுத்தார் ரோஹித் சர்மா. அப்போது அவர் விக்கெட் வீழ்த்தி யாரும் எதிர்பார்க்காததை செய்தார் கோலி. நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், கோலி வீசிய பந்தை லெக் திசையில் அடிக்க முயன்றார். ஆனால், பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் வசம் சென்றது. அவர் கேட்ச் பிடித்தார்.
சுமார் 9 ஆண்டுகள் கழித்து விராட் கோலி பந்து வீசி விக்கெட் எடுத்து இருந்தார். தான் விக்கெட் வீழ்த்திய உடன் தன் கைகளை உயர்த்தி சாதித்து விட்டேன் என விராட் கோலி சைகை காட்ட, கோலி பந்து வீசிய போது கை தட்ட மறுத்த அனுஷ்கா சர்மா, அவர் விக்கெட் வீழ்த்தியதை நம்ப முடியாமல் வாயை பிளந்து கொண்டு சிரித்து மகிழ்ச்சியில் மூழ்கினார். அந்த காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அனுஷ்கா சர்மா இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படும் நிலையில், தன் மனைவிக்கு தீபாவளிப் பரிசாக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் விராட் கோலி. கோலி இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.