அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி லீக் சுற்றில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அகமதாபாத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி அபார வெற்றியை பெற்று இருக்கிறது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 12 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அபிசேக் அதிரடியாக ஆட முற்பட்டு துரதிஷ்டவசமாக போல்ட் ஆனார். இசான் கிசன் ஏழு பந்துகளில் அவர் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு திலக் வர்மா மற்றும் கேப்டன் சூரியகுமார் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
திலக் வர்மா மூன்று பவுண்டரி,ஒரு சிக்சர் என 27 பந்துகளில் 31 ரன்களும், கேப்டன் சூரியகுமார் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 28 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணியின் இலக்கு மிகவும் குறைவாக இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சிவம் துபே தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரிகள் என 66 ரன்கள் குவித்தார்.
ஹர்திக் பாண்டியா இறுதியில் மூன்று சிக்ஸர்கள் அடித்து 21 பந்துகளில் 30 ரன்கள் சேர்க்க ரிங்கு சிங் மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் அடித்தார். இதில் ஒரு சிக்சர் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர் மைக்கேல் லீவிட் 24 ரன்களும், மேக்ஸ் தாவ்ட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் நட்சத்திர வீரரான பாஸ் டீ லீட் 33 ரன்களும், கோலின் அக்கர்மேன் 23 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் ஆரியன் தட் டக் அவுட்டாக, நெதர்லாந்து அணி தோல்வியை நோக்கி சென்றது.
எனினும் இறுதிக்கட்டத்தில் கேப்டன் ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் மற்றும் ஜாக் லைன், நோவா க்ரோஸ் போன்ற வீரர்கள் கடைசி கட்டத்தில் போராடினர். இதனால் நெதர்லாந்து அணி இந்தியாவின் இலக்கு வரை அருகில் வந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணிக்கு கொஞ்சம் அனுபவம் மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம்.