அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மிகப்பெரிய சாதனை ஒன்றைப் படைக்கக் காத்திருக்கிறார்.
இந்தியாவின் டி20 வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற குல்தீப் யாதவிற்கு இன்னும் 2 விக்கெட்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும், குல்தீப் 5 விக்கெட்கள் வீழ்த்தினால் எந்த இந்திய சுழற்பந்து வீச்சாளரும் தொடாத சாதனை ஒன்றையும் படைக்க வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். 2024 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த சாஹல், இதுவரை 80 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஆனால், குல்தீப் யாதவ் அவரை விட மிகக் குறைவான போட்டிகளிலேயே இந்தச் சாதனையை நெருங்கியுள்ளார். இதுவரை 54 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள குல்தீப், 95 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் 2 விக்கெட்களை வீழ்த்தினால், சாஹலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிப்பார்.
ஒருவேளை இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினால், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார். இதுவரை இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் (121), ஜஸ்பிரித் பும்ரா (110) மற்றும் ஹர்திக் பாண்டியா (109) ஆகியோர் மட்டுமே 100 விக்கெட்களைக் கடந்துள்ளனர். அந்தப் பட்டியலில் இணையும் முதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் மாறுவார்.
மேலும், அவர் 5 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில், உலக அளவில் அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இந்த வரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் (53 போட்டிகள்) முதலிடத்திலும், நேபாள வீரர் சந்தீப் லாமிச்சனே (54 போட்டிகள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்திய குல்தீப், நெதர்லாந்து போட்டியிலும் தனது சுழல் திறமையை காட்டுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.