அகமதாபாத்: ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் லீக் சுற்றில் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வென்று இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் வந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்று கேட்ட கேள்விக்கு ஆடுகளம் மிகவும் சிறியதாகவும் ரன்குவிப்புக்கு சாதகமாகவும் இருக்கிறது என்று நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட்வேர்ட்ஸ் கிண்டல் அடித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்த போட்டியில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம். அதற்கு ஆரியன் தத்துக்கு தான் என் வாழ்த்துக்களை சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார். இந்த போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில் இருந்தோம். ஏனென்றால் எங்கள் அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலரும் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்.
இந்தியா போன்ற ஒரு அணியை 14, 15 ஓவர் வரை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே மிகப்பெரிய விஷயம். ஆனால் நாங்கள் இரண்டு வாய்ப்புகளை தவற விட்டோம். சில திட்டங்களை செயல்படுத்துவதில் கோட்டை விட்டு இருக்கின்றோம். அப்படி செய்தால் நிச்சயம் இந்தியா போன்ற அணி அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நமக்கே ஆப்பு வைத்து விடுவார்கள்.
இந்திய அணிக்கு கைவசம் விக்கெட்டுகள் இருந்தது. இதனால் இறுதிக்கட்டத்தில் அவர்கள் அதிரடி காட்டுவார்கள் என்று எனக்கு தெரியும். இங்கு நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். மைதானம் மிகவும் சிறியதாக இருக்கின்றது. ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கின்றது. ஆனால் மக்கள் அதிக அளவு வந்து போட்டிகளை பார்க்கிறார்கள்.
கிரிக்கெட்டுக்கு இங்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கின்றது. இது போன்ற தொடரில் நாங்கள் சில தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். அதை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். நாங்கள் சில, சில தருணங்களில் மட்டும் தான் நன்றாக விளையாடினோம். அந்த தருணங்களை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்காட் எட்வேர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.