அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த சிவம் துபே, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்குப் பிறகு ஒரு அரிய சாதனையை நிகழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிவம் துபே முக்கியப் பங்காற்றினார்.

ஒரே டி20 உலகக்கோப்பை போட்டியில் அரைசதம் அடித்ததோடு, விக்கெட்டையும் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் சிவம் துபே இணைந்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது சிவம் துபே, 31 பந்துகளில் 66 ரன்கள் விளாசி அரைசதம் கடந்தார். பின்னர் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையைச் செய்யும் மூன்றாவது இந்திய வீரரானார்.
விராட் கோலி, 2012 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 78 ரன்கள் மற்றும் 1 விக்கெட் வீழ்த்தினார். அதேபோல 2016 அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 89 ரன்கள் மற்றும் 1 விக்கெட் வீழ்த்தினார்.
ஹர்திக் பாண்டியா, 2024 டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக 50 ரன்கள் மற்றும் 1 விக்கெட் வீழ்த்தினார். நடப்பு 2026 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிராக 52 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிவம் துபே, தற்போது 2026 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 66 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
நெதர்லாந்து இன்னிங்ஸின் 14வது ஓவரில் பாஸ் டி லீட் விக்கெட்டையும், கடைசி ஓவரில் லயன்-கேஷட் விக்கெட்டையும் வீழ்த்தி சிவம் துபே இந்தச் சாதனையை உறுதி செய்தார். ஆல்ரவுண்டராக அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் கைகொடுக்கும் சிவம் துபேவின் இந்தச் செயல்பாடு, சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும் இந்திய அணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 193 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.