அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆல்ரவுண்டராக ஜொலித்த சிவம் துபே, ஆட்ட நாயகன் விருதை வென்றார். வெற்றிக்குப் பின் பேசிய அவர், இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதற்காகவே தான் தன்னை தயார் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது ரன் ரேட் 8 என்ற நிலையில் இருந்தது. கடைசி 7 ஓவர்கள் விக்கெட் வீழ்ச்சி ஆகாமல் தாக்குப்பிடித்து ரன் குவிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் சிவம் துபே 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.
194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பந்துவீச்சில் சிவம் துபே 3 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரது சிறப்பான செயல்பட்டால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

31 பந்துகளில் 66 ரன்கள் விளாசியது குறித்துக் கேட்டபோது, "ஆடுகளம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. பந்து தாழ்வாகவும் வந்தது, சில நேரங்களில் திரும்பியும் வந்தது. ஆனால் எனக்கு இதுபோன்ற சூழ்நிலையில் பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். நான் ரசித்து விளையாடினேன்" என்று கூறினார்.
சிக்ஸர் அடிப்பது குறித்துப் பேசிய அவர், "எனக்கு சிக்ஸர் அடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லா பந்திலும் சிக்ஸர் அடிக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப பவுண்டரிகளையும் அடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்கள் எனக்கு யார்க்கர் வீச மாட்டார்கள், ஸ்லோவர் பந்துகளையோ அல்லது ஷார்ட் பிட்ச் பந்துகளையோதான் வீசுவார்கள் என்று எனக்குத் தெரியும். அதற்காகவே நான் காத்திருந்தேன்" என்று தனது திட்டத்தை விவரித்தார்.
பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் சிவம் துபே அசத்தினார். 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். "நான் எனது பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கிறது. டி20 போட்டியில் அடி வாங்குவது சகஜம் தான், ஆனால் அதே சமயம் விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும்" என்று அவர் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 193 ரன்கள் குவிக்க முக்கியக் காரணமாக இருந்த சிவம் துபேவின் இந்த அதிரடி ஆட்டம், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாக இந்திய அணிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.