அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. ஒரு கட்டத்தில் 160 ரன்களைத் தொடுமா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், சிவம் துபேவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா இமாலய ஸ்கோரை எட்டியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் குரூப் ஏ பிரிவு லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியிலும் சோபிக்கத் தவறினார். ஆரியன் தத் வீசிய முதல் ஓவரிலேயே 3 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து மூன்றாவது உலகக்கோப்பை போட்டியில் அவர் டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாகத் தொடங்கினாலும், 7 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர். நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால், இவர்கள் இருவராலும் வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. திலக் வர்மா 27 பந்துகளில் 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களின் ஸ்ட்ரைக் ரேட் 120 என்ற அளவிலேயே இருந்ததால், இந்தியாவின் ரன் வேகம் கணிசமாகக் குறைந்தது.
13.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஒரு ஓவருக்கு சராசரியாக 8 ரன்கள் என்ற விகிதத்தில்தான் ஸ்கோர் சென்றுகொண்டிருந்தது. விக்கெட்டுகள் கையில் இல்லாததால், கடைசி நேரத்தில் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டுவது கடினம் என்றே கருதப்பட்டது.
அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய சிவம் துபே ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 16 ரன்கள் எனத் திணறிக்கொண்டிருக்க, சிவம் துபே தனி ஆளாக நெதர்லாந்து பந்துவீச்சைச் சிதறடித்தார். சரமாரியாகச் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
வெறும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த சிவம் துபே, 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகளும் 6 பிரம்மாண்ட சிக்ஸர்களும் அடங்கும்.
கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவும் வேகம் காட்டினார். அவர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் சந்தித்த 3 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 6 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து பந்துவீச்சாளர் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார். ஆரியன் தத் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் சிக்கனமாகப் பந்துவீசினர்.
இறுதியில் சிவம் துபேவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.