மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பெரும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தவிர்த்தனர்.
இச்சம்பவம் போட்டியின் கடைசி ஓவரில் அரங்கேறியது. ஷிவம் துபே வீசிய பந்தை ஜாக் லயன்-காசெட் அடிக்க, பந்து ஆஃப்-சைடில் உயரமாகச் சென்றது. எக்ஸ்ட்ரா-கவரில் இருந்து சூர்யகுமார் பின்னோக்கி ஓட, டீப் திசையில் இருந்து ரிங்கு சிங் பந்தைப் பிடிக்க முன்னோக்கி ஓடினார். இருவரும் பந்தைக் குறிவைத்து ஓடியதால், மோதி கொள்ளும் அபாயம் உருவானது.

கடைசி நொடியில் சூர்யகுமார் கைகளை அசைத்து சைகை காட்டினார். பந்தின் கீழேயே இருந்த ரிங்கு சிங், சூர்யகுமார் வேகமாக வந்ததைக் கண்டு விலக்கிக்கொள்ள, பந்து கீழே விழுந்து கேட்ச் மிஸ் ஆனது. அதிர்ச்சியடைந்த சூர்யகுமார் மைதானத்தில் அமர்ந்த நிலையில், அத்துடன் ரிங்கு சிங்கிடம் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
கிரிக்கெட்டில் இதுபோன்று பந்தைப் பிடிக்கும்போது ஏற்படும் மோதல்கள் வீரர்களுக்கு மிகத் தீவிரமான காயங்களை ஏற்படுத்தலாம். பொதுவாக, அவுட்ஃபீல்டில் இருந்து பந்தைப் பிடிக்க ஓடிவரும் வீரருக்கே முன்னுரிமை உண்டு. இந்த சம்பவத்தில் ரிங்கு சிங் மீது தவறு இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சூர்யகுமார் கோபமாக திட்டினாலும், ரிங்கு அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
பாகிஸ்தான் போட்டியில், இது போல் தான் சூர்யகுமார் குல்தீப் மீது கோபம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்ததால், இப்போட்டி முக்கியத்துவம் அற்றதாகவே கருதப்பட்டது. முடிவில், நெதர்லாந்து அணி கடும் சவால் அளித்தபோதும், இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவின் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ஸ்கோருக்கு முக்கிய பங்காற்றியது. வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், ஷிவம் துபே இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.