அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி t20 உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 12 போட்டிகளில் வென்று இருக்கிறது.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுக்க, பதிலுக்கு நெதர்லாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார், முதலில் நாங்கள் பேட்டிங் செய்ய நினைத்தோம்.

இதன் மூலம் 190 ரன்களுக்கு மேல் அடித்திருக்கின்றோம். நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு இருந்தது. இதனால் பவுலர்களுக்கு பந்து வீச கூடுதல் சவாலாக இருந்தது. எனினும் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சூப்பர் 8 சுற்றில் இதே போல் நாங்கள் ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறலாம்.
இதனால் அனைத்து வீரர்களுமே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடுவது என்பது மிகவும் முக்கியம். எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். சிவம் துபே நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் எப்படி விளையாடினார் என்று நாம் அனைவரும் பார்த்தோம். தற்போது அதேபோல் ஒரு ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டநாயகன் விருது வாங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்த போட்டியிலும் வாங்க வேண்டும் என்று நினைத்தார். இந்த போட்டியை பொறுத்தவரை மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தமோ, அதை எல்லாம் சரியாக டிக் செய்திருக்கின்றோம். வெற்றி பெற்றாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தி பாடங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன். எங்கள் அணியின் பல பவுலர்கள் இருக்கின்றார்கள். இதனால் யாருக்கு பவுலிங் தருவது என்ற குழப்பம், தலைவலி எனக்கு கண்டிப்பாக இருக்கும். போட்டியில் அன்று ஆடுகளம் என்ன மாதிரி இருக்கிறதோ, அதற்கு ஏற்ப நான் பந்துவீச்சு முறையை மாற்றுவேன்.
அணி நல்ல நிலையில் இருக்கின்றது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் வெற்றிக்கு பங்களிக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வீரர்களுக்கு சிறந்த நாளாக அமைகிறது. ஆனால் எனக்கு அனைவரும் வெற்றிக்காக பங்களிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.