அகமதாபாத்: டி20 உலககோப்பையில் இந்திய அணிக்கு உண்மையான சவாலே சூப்பர் 8 சுற்று முதல் தான் தொடங்குகிறது என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இந்திய அணி தங்களது பவுலிங் படையை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர்,நெதர்லாந்து போன்ற ஒரு அணிக்கு 176 ரன்களை வாரி வழங்கியது இந்திய பந்துவீச்சின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்று குறை கூறினார்.
இது குறித்து பேசிய சேவாக் "நான் நினைக்கவில்லை இந்தியாவுக்கு இதுவரை உண்மையான சவால் ஏற்பட்டதாக. முதல் போட்டியில் இந்தியா சற்று தடுமாறினாலும், அதன்பிறகு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. உண்மையான சோதனை சூப்பர் 8 சுற்றில் தான் தொடங்கும்."

"இன்று இந்தியா 193 ரன்கள் எடுத்தாலும், 176 ரன்களை வாரி வழங்கியது. எனவே, இந்திய அணி தங்கள் பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு வலுவான பேட்டிங் அணிக்கு எதிராக இந்த பந்துவீச்சுப் பிரிவு எப்படிச் செயல்படும், எப்படிப் பயன்படுத்தப்படும்?"
"இன்று அபிஷேக் ஷர்மா மற்றும் சிவம் தூபே ஓவர்களை வீசினர். ஆனால், பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது இது நடக்காது. அவர்கள் தங்கள் ஒரு ஓவரில் 15 ரன்கள் கொடுத்தால், ஆட்டத்தின் போக்கே மாறிவிடும். எனவே, இந்தியா பெரிய அணிகளுக்கு எதிராக இதுபோன்ற ரிஸ்க்குகளை எடுக்கக்கூடாது," என்றும் சேவாக் எச்சரித்தார்.
நெதர்லாந்திற்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய முன்னணி வீரர்கள் தங்கள் ஒன்பது ஓவர்களில் மொத்தமாக 53 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில், மற்ற பந்துவீச்சாளர்கள் 11 ஓவர்களில் மீதமுள்ள 123 ரன்களை வாரி வழங்கினர்.
இந்த சூழலில், பனிப்பொழிவு அதிகம் இருந்ததால், பந்தவீச்சாளர்கள் தடுமாறியதாகவும், சூப்பர் 8 சுற்று முன் அனைவரும் பந்துவீச வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அடுத்த போட்டி வரும் ஞாயிற்றுகிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எதிர்கொள்கிறது.