ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதிப் போட்டியில் நேபாள அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
ஆசிய விளையாட்டில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில அணிகள் நேரடியாக காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதல் காலிறுதிப் போட்டியில் இந்தியா, நேபாள அணியை சந்தித்தது. அந்த அணி முந்தைய போட்டியில் கிரிக்கெட் அனுபவமற்ற மங்கோலியா அணியை சின்னாபின்னமாக்கி இமாலய வெற்றியை பெற்று இருந்தது. அதே மைதானத்தில் காலிறுதிப் போட்டியும் நடைபெற்றது.
தங்களின் முன் அனுபவத்தால் நேபாள அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கொஞ்சம் ஆட்டம் காட்டியது. எனினும், இந்திய அணி வெற்றி பெற்றது.
காலிறுதியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ருதுராஜ் கெயிக்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் முதலில் இருந்தே தன் அதிரடி ஆட்டத்தால் மிரட்டினார்.
ருதுராஜ் கெயிக்வாட் 23 பந்துகளில் 25 ரன்கள், திலக் வர்மா 10 பந்துகளில் 2 ரன்கள், ஜிதேஷ் சர்மா 5 ரன்கள் என ஒரு பக்கம் படுமோசமான பேட்டிங் தொடர ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் எல்லாம் சதம் அடித்து அதற்கு அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
பின் சிவம் துபே 19 பந்துகளில் 25, ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கடைசி 3 ஓவர்களில் ரன் சேர்க்கவே இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
பின் நேபாள அணி சேஸிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் ஆசிப் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் குஷால் புர்டேல் நிதான ஆட்டம் ஆடி 32 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டம் உண்மையில் துவக்கத்தில் விக்கெட் எடுக்க தடுமாறிய இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருந்தது.
சென்ற போட்டியில் சதம் விளாசிய குஷால் மல்லா 22 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோஹித் பௌடல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் இந்திய பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய்.
முந்தைய போட்டியில் 9 பந்துகளில் அரைசதம் அடித்த தீபேந்திரா இந்தப் போட்டியிலும் தன் அதிரடியை காட்டினார். 15 பந்துகளில் 4 சிக்ஸ் அடித்து 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் நீண்ட நேரம் களத்தில் நின்று இருந்தால் கதையே மாறி இருக்கும். அவர் விக்கெட்டையும் ரவி பிஸ்னோய் தான் வீழ்த்தினார்.
அடுத்து சந்தீப் ஜோரா ஒரு மிரட்டு மிரட்டினார். 12 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். எனினும், நேபாளம் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்ததால் வெற்றி இலக்கை நெருங்கும் வாய்ப்பை இழந்தது. 17.1 ஓவரில் எல்லாம் 156 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது அந்த அணி. அதுவரை இந்தியா வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், 8 விக்கெட்கள் வீழ்ந்த பின்னரே ஆட்டம் இந்தியா வசம் வந்தது.
பின் 20 ஓவர்களில் முடிவில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.