ஹாங்சோ : ஆசிய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா ஆடிய ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா - நேபாளம் அணிகள் இடையே ஆன ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் ருடுராஜ் கெயிக்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். ஆனால், சிஎஸ்கே அணியின் செல்லப் பிள்ளையான ருதுராஜ் கெயிக்வாட் பந்து எங்கே வருகிறது என தடவுவது போல ஆடினார். ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் சிக்ஸ், ஃபோர் என 200 ஸ்ட்ரைக் ரேட்டில் நேபாள அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
ஆனால், ருதுராஜ் கெயிக்வாட் டெஸ்ட் மேட்ச் போல ஆடினார். இத்தனைக்கும் போட்டி நடக்கும் மைதானம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் போல அல்லாமல், பள்ளிக்கூட மைதானம் போல மிகவும் சிறிய பவுண்டரியை கொண்டு இருந்தது. அங்கே மிக எளிதாக சிக்ஸ் மற்றும் ஃபோர் அடிக்கலாம்.
இந்த குட்டி மைதானத்தில் தான் நேபாள அணி வீரர்கள் கடந்த போட்டியில் அதிக ரன்கள் அடித்து பல டி20 சாதனைகளை முறியடித்தனர். அதே போல இந்தப் போட்டியிலும் நேபாள அணி அந்த மைதானத்தை பயன்படுத்தி ரன் குவித்தால் நிலைமை மோசமாகும். அதனால் இந்தியா முதலில் ஆடி கூடுதல் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஆனால், ருதுராஜ் முதலில் ஆடிய ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கே வேட்டு வைப்பது போல இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் சமாளித்து நான்கு ஃபோர் அடித்தார். பின் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த போது ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 73 ரன்கள் குவித்து இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்பாடா ருதுராஜ் அவுட் ஆகி சென்று விட்டார். அடுத்து வந்த திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போல ஆடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. திலக் வர்மாவால் ஒரு பந்தை கூட சரியாக அடிக்க முடியவில்லை. அவர் 10 பந்துகளில் வெறும் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.