துபாய் : அண்டர் 19 ஒருநாள் போட்டி ஆசிய கோப்பை தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி நேபாள அணியை தனி ஆளாக காலி செய்தார்.
இந்த ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தி நம்பிக்கை அளித்து இருக்கிறார் ராஜ் லிம்பானி. அவருக்கு 18 வயது தான் ஆகிறது. இப்போதே ஸ்விங் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். மித வேகத்தில் பந்து வீசி வரும் அவர் அதை வைத்தே சிறப்பாக பந்தை ஸ்விங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜ் லிம்பானி குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்தவர். சராசரியாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவர், அதன் மூலம் இன் ஸ்விங் பந்துகளை அதிகமாக வீசுவதில் வல்லவர். அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை. இந்த நிலையில், நேபாள அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 9.1 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். நேபாள அணி 22.1 ஓவரில் 52 ரன்களுக்கு சுருண்டது.
அடுத்து இந்திய அண்டர் 19 அணி முத்தரப்பு கிரிக்கெட் தொடர், ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் என வரிசையாக முக்கிய தொடர்களில் பங்கேற்க உள்ளது. ராஜ் லிம்பானி அந்த அணிகளிலும் இடம் பெற்று இருக்கிறார். அதனால் அவர் மீது இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விக்கெட் வீழ்த்தாமல் போனாலும், அவர் அதிக போட்டிகளில் ஆடாததும் அதற்கு ஒரு காரணம். இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. நாக் - அவுட் போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசக் கூடும். இந்த தொடரில் அவரே அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அண்டர் 19 அணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அவர் அடுத்து ஐபிஎல், இந்திய அணி என முன்னேற்றம் காணலாம்.