வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எடுத்துள்ள முடிவு ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக பந்துவீசி வந்த அர்ஷ்தீப் சிங்கை ஓரம் கட்டிவிட்டு, கடந்த தொடரில் ரன்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு அளித்துள்ளதே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாகும்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸ் வென்றது மகிழ்ச்சி என்றாலும், பிளேயிங் லெவனை அறிவித்தபோது ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முக்கிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கின் பெயர் பட்டியலில் இல்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தார். அந்தத் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், அவரது எகானமி ரேட் 5.5-க்கும் குறைவாகவே இருந்தது. அப்படிப்பட்ட ஃபார்மில் இருக்கும் ஒரு பவுலரை, அணியின் நலன் கருதாமல் கம்பீர் நீக்கியுள்ளது ஏன் என்று கிரிக்கெட் விமர்சகர்களே குழம்பிப் போயுள்ளனர்.
அதே சமயம், தென்னாப்பிரிக்க தொடரில் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தொடரில் மிக மோசமான எகானமி ரேட்டை வைத்திருந்த அவருக்கு, அர்ஷ்தீப் சிங்கை விட முன்னுரிமை அளிக்கப்பட்டதுதான் ரசிகர்களின் கோபத்தை தூண்டிவிட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்கினார்கள். ஹர்ஷித் ராணா தனது திறமையை நிரூபிக்க காத்திருக்கிறார். 2027 உலகக்கோப்பை கனவுடன் சிராஜ் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.
அதேபோல், அணியில் தேர்வு செய்யப்பட்ட போதே கடும் விமர்சனத்திற்கு உள்ளான ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் #GautamGambhir ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியது. "இதுதான் கம்பீர் யுகமா?" என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். "நன்றாக வீசுபவரை வெளியே உட்கார வைத்துவிட்டு, பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் அணியை கெடுக்காதீர்கள்" என ரசிகர்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.