பாண்ட்யாவின் விக்கெட்
இந்நிலையில் இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் 40வது ஓவரின் போது டேரில் மிட்செல் வீசிய பந்தை பாண்ட்யா ஸ்ட்ரோக் வைக்க முயன்று, பந்து மிஸ்ஸாகி உள்ளே சென்றது. அப்போது ஸ்டம்ப்-களில் லைட் எறிந்து எதிரணி அவுட் கேட்டனர். எனினும் அதில் உறுதியாக இல்லாத கள நடுவர்கள் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தனர்.
அம்பயரின் முடிவு
உள்ளே சென்ற பந்து, ஸ்டம்புகளுக்கு மேலே தான் சென்றது. கீப்பர் டாம் லேதமின் கைகளுக்குள் சென்ற பிறகும் கூட ஸ்டம்புகளில் விளக்கு எறியவே இல்லை. ஆனால் லேதம் தான் கிளவுஸை ஸ்டம்புகளுக்கு மிகவும் அருகில் வைத்து தட்டிவிட்டார். இதனால் தான் விளக்கு எறிந்தது தெளிவாக தெரிந்தது. ஆனால் இதற்கு அதிர்ச்சி தரும் வகையில் அம்பயர் அவுட் எனக்கொடுத்தார். இதற்கு ரசிகர்கள் கொந்தளித்தனர்.
உடனடியாக ட்விஸ்ட்
ஆனால் அதற்கு அடுத்த ஓவரிலேயே லேதமின் தவறுகள் அம்பலமானது. 41வது ஓவரில் ப்ரேஸ்வெல் வீசிய பந்தை சுப்மன் கில் கட் ஷாட் ஆடினார். பந்து பேட்டில் பட்டு அருகிலேயே விழுந்தது. ஆனால் அப்போது ஸ்டம்புக்கு மிகவும் அருகில் நின்றிருந்த டாம் லேதம், கில் அடிப்பதற்கு முன்னதாகவே ஸ்டம்புகளை கைகளால் இடித்துவிட்டார். கில் பந்தை அடித்துவிட்டதால், லேதமின் தவறு நன்றாக தெரிந்தது.
கொந்தளிக்கும் ரசிகர்கள்
இதே போன்ற தவறை தான் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டிலும் டாம் லேதம் செய்தார். அவரின் அவசரத்தால் தான் பெயில்கள் விழுந்தன. ஆனால் இதனை சரியாக ஆராயாத 3வது நடுவர் அவுட் எனக்கொடுத்தார். இதனால் டாம் லேதமையும், 3வது நடுவரையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ரன்களை விளாசினார்.