நாக்பூர்: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை புதன்கிழமை தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு இன்னும் ஐந்து போட்டிகளே உள்ள நிலையில், இந்த தொடர் இறுதி பயிற்சி களமாக அமையும். இந்திய அணி பிளேயிங் லெவனை ஏற்கனவே தேர்வு செய்த நிலையில், தற்போது திலக் வர்மாவின் காயம் சில சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தற்போது மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 2023-க்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் எந்த டி20 சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு, காயம் காரணமாக எந்த டி20 ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

எனினும், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற அவரது சிறப்பான ஆட்டங்கள் மூலம் மீண்டும் அவர் அணியில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற வைத்துள்ளது. கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் 604 ரன்கள் குவித்து, 175.07 ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்தார். இது 500-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த பதினொரு பேட்ஸ்மேன்களில் இரண்டாவது சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.
அவர் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து இரண்டிற்கும் எதிராக 150-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டையும், ஒவ்வொரு கட்டத்திலும் 140-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டிருந்தார். ஷார்ட் பந்துகளுக்கு எதிரான அவரது திறமை குறித்த நீண்டகால கேள்விக்கு, இதன்மூலம் வலுவான பதிலளித்தார். வலது கை பேட்ஸ்மேனாக ஐயர் திலக்கிற்கு நேரடி மாற்று வீரராக இருக்க மாட்டார். ஆனால், இந்தியாவின் டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இது அவருக்குச் சாதகமாக அமையலாம்.
மறுபுறம், இஷான் கிஷன் ஐயரை விட ஐபிஎல் தொடரில் குறைவான ரன்களே அடித்தார். ஒரு சதம் மற்றும் ஒரு ஆட்டமிழக்காத 94 ரன்கள் தவிர பெரிய அளவில் எதையும் செய்யவில்லை. இருப்பினும், அவர் ஜார்கண்டிற்காக சையது முஸ்தாக் அலி தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு வந்தடைந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயரை போலல்லாமல், இஷான் இந்திய டி20 உலக கோப்பை அணியிலும் உள்ளார். எனவே, திலக் மீண்டும் முழு உடற்தகுதியுடன் திரும்புவார் எனில், அணியில் இருக்கும் ஒருவருக்கு வாய்ப்புகள் கொடுப்பதை இந்தியா விரும்புவதற்கு இஷான் ஒரு காரணமாக இருக்கலாம்.
மறுபுறம், இஷானை சாம்சனுக்கு மாற்று கீப்பர்-ஓப்பனர் பேட்ஸ்மேனாகவும் இந்தியா பயன்படுத்தலாம். இதன் மூலம், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக்கிற்கு அடுத்த வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரை பயன்படுத்தலாம். இதனால் முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பு அளிக்குமா, இல்லை இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.