இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒரு பொற்காலத்தை அனுபவித்து வரும் நியூசிலாந்து அணி, 2024 இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற நிலையில், இப்போது இந்த டி20 தொடரையும் கைபற்ற ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த இரண்டு வாரங்களில் டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில், இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் நல்ல பயிற்சி தளமாக அமையும்.
முழு பலத்துடன் களமிறங்கும் இந்த இரு அணிகளும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டி20 தொடரில் மோதுகின்றன.போட்டிக்கு முன்னதாக டாஸ் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் மிட்செல் சான்ட்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இது குறித்து பேசிய மிட்செல் சான்ட்னர், "இது ஒரு நல்ல விக்கெட் போலவே தெரிகிறது, ஆரம்பத்தில் பந்துவீச்சில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். கடந்த வாரம் எங்களுக்குச் சிறப்பாக அமைந்தது. இது ஒரு புதிய தொடர், உலகக் கோப்பைக்கான ஒரு சிறந்த பயிற்சி," என்று குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து பேசிய சூர்யகுமார், நாங்களும் இந்த ஆட்டத்தில் முதலில் பந்து வீசு தான் இருந்தோம். ஏனென்றால் நேற்று பயிற்சி செய்து கொண்டிருந்தபோது இரவு எட்டு முப்பது மணிக்கு மேல் பனிப்பொழிவு அதிகம் இருந்தது. எனினும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் டி20 உலக கோப்பை தொடரில் இது போன்ற ஒரு சூழல் ஏற்படலாம். இதனால் அதற்கு நாம் இப்போது இருந்தே தயாராக இருக்க வேண்டும்.
எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் இருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஹர்சித் ராணா, ரவி பிஸ்னாய் மற்றும் குல்தீப் ஆகியோருக்கு வாய்ப்பு இல்லை.இவர்களை தவிர மற்ற அனைவரும் விளையாடுகின்றனர் என்று கூறினார். இதன் மூலம் இந்திய அணியின் நம்பர் மூன்றாவது இடத்திற்கு இசான் கிஷனும், ஐந்தாவது இடத்திற்கு ரிங்கு சிங்கும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
நியூசிலாந்து ஒரு அனுபவம் வாய்ந்த அணியுடன் களமிறங்குகிறது, அதில் பலவீனங்கள் மிகக் குறைவு. ஜேம்ஸ் நீஷம் மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற வேகப்பந்து மற்றும் சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர். சான்ட்னரும் பெரிய ஷாட்களை அடிக்கக்கூடியவர்.ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன் ஆகியோரை உள்ளடக்கிய அவர்களின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவானது. மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு காலில் காயம் உள்ளதால் இந்தத் தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை. கிளர்க் அறிமுக வீரராக களமிறங்க, ஜேமிசன் மற்றும் டஃபி ஆகியோர் வேகப்பந்துவீச்சில் உள்ளனர். அணியில் பல சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், சீஃபர்ட் இந்த தொடருக்கான அணியில் இல்லை.